வீட்டில் இருக்கும் பிள்ளைகள் எப்போதும் ஒற்றுமையாக, கதைபேசி, சிரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கலாம். ஆனால் அது நம்முடைய வழக்கமில்லை.
சகோதரர்கள், சகோதரிகள், சகோதர-சகோதரிகள் என ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களுக்குள் சண்டை, வாக்குவாதம், மோதல் என்பது வரத்தான் செய்யும். அதுதான் இயல்பு. அதைத்தான் நீங்களும், நாங்களும் இந்த ஒட்டுமொத்த உலகமும் இளம் வயதில் செய்தது. செய்திருக்கிறது. செய்து கொண்டிருக்கிறது. எனவே, இதில் எந்த விநோதமும் கவலையும் இல்லை.
சரி. இந்த சண்டை என்பது ஒன்று உண்டானால், அதற்கு சமாதானம் என்ற ஒன்றும் இயற்கையாகவே இருக்கும். ஆனால், இந்த சண்டைக்குள் பெரியவர்கள் ஒருவர் தலையிடும் போதுதான் அது தலைவலியாக மாறுகிறது.
குழந்தைகள் சண்டையிட்டுக் கொள்ளும்போது பெற்றோர் வாயை மூடிக் கொண்டு விலக்கிவிடலாமே தவிர, வார்த்தைகளால் பஞ்சாயத்து செய்யக் கூடாது. நீங்கள் எவ்வளவு பெரிய விஜயகாந்தாகவோ சரத்குமாராகோவ இருந்தாலும் கூட, உங்களுக்கு இந்த பஞ்சாயத்துக்கு நிச்சயம் சரிவராது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
சரி அப்படியே ஒரு பஞ்சாயத்தில் இறங்கினாலும், நீங்கள் சொல்லக் கூடாதவை என்று சில இருக்கின்றன.
இதையும் படிக்க | உங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? எளிதாக அறியலாம்
நீதான் பெரியவன்/சிறியவன். நீ தான் விட்டுக் கொடுக்க வேண்டும்.
நீ ஏன் உன் சகோதரன் /சகோதரி போல இல்லை.
நீ உன் சகோதரனையோ / சகோதரியையோ வெறுக்கக் கூடாது.
நீ எதையும் மிகைப்படுத்திக் கூறுகிறாய்.
உன் சகோதரனோ சகோதரியோ அவ்வாறு பேசும்போது அதனை கண்டுகொள்ளாமல் இருந்துவிடு.
நீ தான் எப்போதும் பிரச்னையை உருவாக்குகிறாய்.
மற்ற பிள்ளைகள் போல ஏன் ஒற்றுமையாய் இருப்பதில்லை என்பன போன்ற அர்த்தமற்ற வாக்கியங்களைக் கூறி பஞ்சாயத்தை பெரிதாக்கி விட வேண்டாம். இது சரியாகக் கூடிய சண்டையைக் கூட பெரிதாக்கி, ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை ஏற்படுத்தும் அளவுக்குக் கூட சென்றுவிடலாம்.