'இந்த வாரம் அதிக முதலீடு இல்லாத 2 வகையான கைவினை தயாரிப்புகளை காண்போம். ஏற்கெனவே சொன்னாற் போல் முதலீடு அதிகம் வைத்துதான் எந்த ஒரு தொழிலையும் செய்ய வேண்டும் என்பதில்லை. குறைந்த முதலீட்டிலும் செய்யலாம். முதலீடே இல்லாமலும் செய்யலாம். விரல்கள் பத்தும் நமக்கு மூலதனம் தானே. இந்த தொழில்கள் அனைத்தையும் நம் சூழ்நிலை, நம்முடைய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு செய்யலாம். சிலரை நாம் பார்த்திருப்போம், அவர்கள் சீசனுக்கு ஏற்றாற்போல் தொழில் செய்வார்கள். இது ஒருவகையான வியாபார யுத்தி. அந்தவகையில், வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் நாம் என்ன தொழில் செய்யலாம் என்று பார்ப்போம்' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்.
பிள்ளையார் சிலை:
விநாயகர் சதுர்த்தி அன்று மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை சிறியது முதல் பெரியது வரை வீட்டில் வாங்கி வந்து பூஜை செய்வது வழக்கம். கூடவே, நிறைய பேர் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பர். இதையே நாம் 'க்ளே' எனப்படும் ஒருவித களிமண்ணில் பிள்ளையார் செய்து அதற்கு பேப்ரிக் பெயிண்ட் கொண்டு அழகு சேர்த்து விற்பனை செய்யலாம். மண் பிள்ளையார் வாங்குவோர் அனைவரும் இதையும் வாங்கி செல்வர். நிறைய பேருக்கு பிள்ளையார் செய்ய தெரியும் இருந்தும் அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவது இல்லை. விநாயகர் சதுர்த்தி அன்று அவர்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக கருதி இதை செய்யலாம்.
பிள்ளையார் குடை:
விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு குடை இல்லாத பிள்ளையாரை பார்க்க முடியாது. பிள்ளையார் குடைகள் பலவிதமாக செய்து விற்பனை செய்யப்படுகிறது. நாம் கூட பிள்ளையார் குடை சுலபமாக தயாரித்து விற்பனை செய்து வருமானம் ஈட்டலாம். விரல் தடிமன் அளவிற்கு ஒரு அடி அல்லது ஒன்னேகால் அடி உயரமுள்ள குச்சியை எடுத்து அதன்மேல் பாகத்தை கத்தி கொண்டு ஆறு பாகங்களாக 2 அங்குல அளவிற்கு பிளக்க வேண்டும். பின்னர் தென்னங்குச்சிகளை தேவையான அளவு வெட்டி சொருக வேண்டும். பின் இது வட்ட வடிவமாக வரும். அதில் கலர் கலரான உல்லன் நூல் கொண்டு சுற்ற வேண்டும். ஓரங்களில் குஞ்சம் தொங்கவிட வேண்டும். குடையின் மேல் பகுதியில் கலசம் போன்று பேப்பரில் செய்து ஒட்ட வேண்டும். குடையின் இதர கீழ் பகுதிகளில் கலர் பேப்பர் ஒட்ட வேண்டும். இதனை வீட்டில் இருக்கும் அனைவரும் சுலபமாக செய்யலாம். அதிக அளவில் செய்து சிறுவியாபாரிகளுக்கு விற்பனை செய்யலாம்.
டெக்கோ பேச்:
டெக்கோ பேச் என்பது டிஷ்யூ பேப்பரில் செய்யும் டிசைன். இதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என பார்ப்போம்:
காட்டன் துணி: அதாவது காடா துணியில் பை தயார் செய்யும்போது அதில் இந்த டெக்கோபேச் வைத்து டிசைன் செய்து பை தயாரித்தால் மிக அழகாகவும், உயர்தரமாகவும் இருக்கும். இது பார்ப்பதற்கு பளபளப்பான மெட்டீரியல் போன்று இருக்கும். அல்லது காட்டன் பேக் தயாரிக்கும் பொழுது நடுவில் மட்டும் இந்த டிசைன் செய்து விற்பனை செய்யலாம்.
பாட்டில் மற்றும் பூந்தொட்டி:
வீட்டை அலங்கரிக்க அழகான பாட்டில் அல்லது பூந்தொட்டியில் இந்த டிசைனை செய்ய மிகவும் அழகாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ள பழைய பூந்தொட்டியில் கூட இதைச் செய்யலாம்.
மரசாமான்கள்:
மரத்தினால் செய்யப்பட்ட மேசை, சிறிய சிறிய பெட்டிகள் எதுவாக இருந்தாலும் அவற்றில் இந்த டெக்கோபேச் டிசைன் செய்யலாம்.
சணல் பை தயாரிப்பு: சணல் பைகள் தயாரிப்பில் கூட இந்த டிசைன் வைத்து பை தயாரித்து விற்பனை செய்யலாம்.
ஜிமிக்கி கம்மல்:
ஜிமிக்கிக்கு மோல்டு வைத்து செய்பவர்கள், அதன் மீது இந்த டெக்கோ பேச் வேலைப்பாட்டை செய்யலாம். புதுமையாகவும், பார்க்க அழகாகவும் இருக்கும்.
வரும் 16.8.2018 முதல் 22.8.2018 வரை பிளாஸ்டிக் மற்றும் கவர் பைகளுக்கு மாற்றாக பேப்பரில் தயாரிக்கப்படும் தாம்பூல பை, மளிகைச் சமான் வாங்கும் பெரிய அளவிலான பை, லாண்டரி பேக், மெடிக்கல் ஷாப் கவர் போன்றவை தயாரிப்பதற் கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு நுழைவு கட்டணம் ரூ.100 செலுத்தினால் போதுமானது, பயிற்சி இலவசமாக அளிக்கப்படும். இதில் கலந்து கொண்டு நீங்கள் தயாரிக்கும் பேப்பர் கவர் மற்றும் பைகளை உங்கள் பகுதியில் உள்ள மளிகை கடைகள், மெடிக்கல் ஷாப், பேன்ஸி ஸ்டோர் ஆகியவற்றில் விற்பனை செய்யலாம். இதனை வீட்டில் உள்ள பழைய செய்தி தாள்களில் செய்வது போதுமானது. முதலீடு அதிகம் இருக்காது. பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க நம்மால் முடிந்ததை செய்ய நல்லதொரு வாய்ப்பாகும். இது ஒரு நாள் பயிற்சி மட்டுமே.
தொடர்பு எண்: 9600807887.