ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தங்களுடைய இளம் பயனாளர்களை இழந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
சமூக வலைதளங்களில் தவிர்க்க முடியாத செயலிகளாக விளங்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளை உபயோகப்படுத்தும் இளம் பயனர்களின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்து வருவதாகவும் அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவில் 45 சதவீதத்தினர் அந்த செயலிகளிலிருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் வெர்ஜ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதையும் படிக்க | ’ரெட்மி வாட்ச் 2’ விரைவில் அறிமுகம்
மேலும் அதே ஆண்டிற்குள் 20-30 வயதில் இருக்கும் பயனர்களில் 4 சதவீத பேர் செயலிகளிருந்து வெளியேறுவார்கள் என ஃபேஸ்புக் ஆவணங்களைக் காட்டி அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.
தற்போது அமெரிக்கா , ஜப்பான் , இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் சிறப்பாக செயல்பட்டாலும் கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து அதில் பதிவிடுபவர்களின் எண்ணிக்கையில் 13 சதவீதம் குறைந்திருப்பது கவலைக்குறிய விசயம் என ஃபேஸ்புக் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இளம் பயனர்கள் இந்த செயலிகளிலிருந்து வெளியேற இரண்டு காரணங்கள் முதன்மையாக முன்வைக்கப்படுகிறது. முதலாவது, 18 வயதிற்கு உட்பட்டவர்கள் வளர்ந்த பின் இன்ஸ்டாவை விட்டு ஃபேஸ்புக் நோக்கி நகர்கிறார்கள். இரண்டாவது ஃபேஸ்புக்கில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் விளம்பர நெருக்கடிகளால் அதிலிருந்து மற்றொரு தரப்பு வெளியேறி டிக்டாக் , ஸ்னாப்சாட் செயலிகளுக்குச் செல்கிறார்கள்.
இந்நிலையில் இளம் பயனர்களைத் தக்கவைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வரும் அக்.28-ஆம் தேதி அந்நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறார். அதில் ஃபேஸ்புக் பெயர் மாற்றப்படும் என்றும் தொழில்நுட்ப ரீதியாக நிறைய புது அம்சங்களை இன்ஸ்டா , ஃபேஸ்புக் செயலிகளில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் அதிகம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.