ஒரு வருட காத்திருப்புக்கு பின்னர் கேலக்ஸி ஸ்மார்ட் வாட்ச்சில் கூகுள் அசிஸ்டண்ட் சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக சாம்சங் நிறுவனத்தின் துணை நிர்வாக அதிகாரி பாட்ரிக் கோமெட் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சிறப்பம்சம் குறித்து பாட்ரிக் கோமெட் கூறியது, “ இந்த புதிய அம்சம் வேகமாகவும் அதே வேளையில் நாம் மற்றவர்களிடம் எப்படி பேசுகிறோமோ அதே போன்ற இயற்கையான உணர்வை கொடுப்பதாகவும் உள்ளது. நாம் இதனை அணிந்து கொண்டு செல்லும் போதே கூகுள் அசிஸ்டண்ட் உதவியுடன் நம்முடைய கேள்விகளுக்கு விரைவாக பதில்களை தெரிந்துகொள்ள இயலும். மேலும், இந்த புதிய கூகுள் அசிஸ்டண்ட் சிறப்பம்சத்தின் மூலம் நாம் நம்முடைய செல்லிடப்பேசியில் இருக்கும் ஸ்பாட்டிஃபை (Spotify) செயலியையும் இயக்கிக் கொள்ள முடியும்” என்றார்.
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய தொழில்நுட்ப அம்சத்தை அறிமுகப்படுத்த காரணமே கூகுள் பிளே ஸ்டோர் (Google play store) தான். சாம்சங் ஸ்மார்ட் வாட்ச்களில் காலம் காலமாக அந்த நிறுவனத்தின் குரல் உதவி (Voice assistant) அம்சமாக பிக்ஸ்பி (Bixby) இருந்து வந்தது. ஆனால், தற்போது இந்த கேலக்ஸி ஸ்மார் வாட்ச்சில் தங்களுக்கு பிடித்த குரல் உதவி செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பயனாளர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. குரல் உதவி செயலி மட்டுமல்லாது கூகுள் ஹோம் (Google home) மற்றும் கூகுள் வேலட் (Google wallet) போன்றவற்றையும் பயனார்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த கேலக்ஸி ஸ்மார்ட் வாட்ச்சில் புதிய அம்சங்கள் எப்போது வெளியாகும் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், கூகுள் அசிஸ்டண்ட் சிறப்பம்சம் இந்த கோடையில் வெளியாக உள்ளது.