பல பெண்கள் கடைசி வரை இதைப் புரிந்துகொள்வதில்லை..

சிலர் சில பந்துகளை தவறவிடலாம். ஒரு சிலர் பல பந்துகளை தவற விடலாம். இவர்களை வாழ்க்கையில் தோற்றவர்கள் என்கிறோம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


உடல்நலம்.. ஆரோக்கியம்.. குடும்ப நலம்.. பொருளாதார நிலை.. குடும்ப உறவுகள்.. என பல்வேறு பந்துகளை இரண்டு கைகளாலும் ஒன்றன் பின் ஒன்றாக வீசி -  பிடித்து ஒரு சுழற்சியை ஏற்படுத்திக் கொண்டே இருப்பது போன்றதுதான் வாழ்க்கை முறையும். 

இதில், சிலர் சில பந்துகளை தவறவிடலாம். ஒரு சிலர் பல பந்துகளை தவற விடலாம். இவர்களை வாழ்க்கையில் தோற்றவர்கள் என்கிறோம். சிலரோ மிக லாவகமாக, அனைத்துப் பந்துகளையும் மிகச் சீராக சுழல வைத்து வாழ்க்கையில் வெற்றியாளர்களாகவோ, சாதனையாளர்களாகவோ மாறுகிறார்கள்.

இவர்களைப் பற்றியதல்ல இப்போது நம்முடைய பேச்சு. இந்த வாழ்க்கை எனும் பந்துகளின் சுழற்சியில், பெரும்பாலான பெண்கள் தவறவிடுவது ஒரே ஒரு பந்தைத்தான். அது அவர்களது உடல்நலம். ஆனால், அந்த பந்தைத் தவற விட்டதைப் பற்றி அவர்கள் ஒரு போதும் கலக்கமோ மனக்கவலையோ அடைவதேயில்லை. அவ்வளவு ஏன் அந்த ஒரு பந்தை தவறவிட்டதைக் கூட அவர்கள் பொருள்படுத்துவதில்லை. அந்த ஒரு பந்தை தவறவிட்டதன் விளைவாக.. அடுத்தடுத்து மற்ற பந்துகள் கீழே விழ நேரிடும் வரை.

ஆனால், அவர்கள் விழித்துக் கொள்ளும் காலம் மிகத் தாமதமாக அமைந்துவிடுவதால் அதற்குப் பெரும்பாலும் பலனேதும் கிடைக்காமலேயே போய்விடுகிறது. சிலரால் மீண்டும் அந்தப் பந்து விளையாட்டுக்குள் நுழைய முடியாமல் பார்வையாளர்களில் ஒருவராக மாறிப் போகிறார்கள். காரணம்.. அவர்கள் முதன்முதலில் கவனிக்காமல் தவறவிட்ட அந்த உடல்நலப் பந்துதான்.

எனவே பெண்களே.. குடும்பத்தாரை ஊட்டி ஊட்டி வளர்ப்பது மட்டும் ஒரு தாயின் கடமையல்ல. அதை விட பன்மடங்கு, தனது உடல் நலத்தையும் பேணிக் காக்க வேண்டும். அவர்களுக்கு எடுத்து வைக்கும் சத்தான உணவுகளில் சம பங்கில்லையென்றாலும், கால் பங்காவது உங்கள் வயிற்றுக்கும் இடப்பட வேண்டும். நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்பட்சத்தில்தான், நீங்கள் ஊட்டி வளர்க்கும் குடும்பத்தாருக்கும் நீண்ட நாள்களுக்கு சத்தான உணவும், ஊக்கமும் உங்களால் கிடைக்கும்.

எனவே, உங்களுக்காக இல்லாவிட்டாலும், நீங்கள் போற்றிப் பேணும் குடும்பத்தாருக்காகவாவது உங்களையும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், பல பெண்கள் கடைசி வரை இதனைப் புரிந்து கொள்வதேயில்லை.

இதுவரை புரிந்து கொள்ளாமலிருந்தாலும் கூட, இனியாவது விழித்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான நேரம்.

அது மட்டுமா? பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களும், அதன் ஆரம்பகட்டத்தில் கண்டறியப்படாமலேயே விடுபடுகிறது. அதற்குக் காரணமும் ஒன்றுதான். உடல்நலம் மீதான கவனக்குறைவு. இதை இப்படியே சொல்லிவிட முடியாது. காரணம், அவர்களது கவனம் முழுக்க பெரும்பாலும் குடும்பத்தின் மீதுதான் என்பது. எனவே, சிறு உடல் நலக் கோளாறுகளையும் முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான சிகிச்சையைப் பெற முன் வர வேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com