புது தில்லி: உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது என்று மக்களவைத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் அறுதிப் பெரும்பான்மைக்கான 272 இடங்களுக்கு மேலாக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடி மீண்டும் இந்திய பிரதமராக வருவது உறுதியாகி விட்டது.
இந்நிலையில் உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது என்று மக்களவைத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் வெற்றி உறுதியான பின்னர் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியஇருவரும் தில்லியில் உள்ள பாஜகவின் தேசிய தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அழைத்தனர். அதன் பின்னர் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு தந்துள்ளனர்
இந்த தேர்தலில் நாடு வென்றுள்ளது, நாட்டு மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்
நாங்களும் எங்கள் கூட்டணி கட்சிகளும் இந்த பிரமாண்ட வெற்றியை மக்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்
130 கோடி மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
இந்த தேர்தலில் தான் அதிகபட்சமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது; கடும் வெயிலிலும் மக்கள் வாக்களித்துள்ளனர்
உலக நாடுகள் இந்தியாவில் நடந்த இந்த ஜனநாயக திருவிழாவை வியந்து பார்க்கின்றன
என்னை நாட்டு மக்கள் புரிந்துகொண்டு வாக்களித்துள்ளனர்; இது நாட்டுக்கான வெற்றி
ஒடிசா, ஆந்திரா, சிக்கிமில் வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்
பாஜக ஆளாத மாநில அரசுகளுக்கு கூட மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.