திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் அனைவரும் காலை முதலே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் மணிகண்டம், அந்தநல்லூர், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி மற்றும் திருவெறும்பூர் உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 10 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 97 பேரும், ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு 155 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,302 பேரும் போட்டியிடுகின்றனர்.
இதில் 7 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 199 கிராம வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 1,358 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 938 வாக்குச் சாவடிகளில் 5 லட்சத்து 18ஆயிரத்து 500 பேர் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.