விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தில் இரண்டு ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சியில் முதல் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதல் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெம்பக்கோட்டை ஊராட்சியில் உள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளரின் ஆதரவாளர்கள் வாக்குசாவடிக்குள் அத்துமீறிச் சென்று வருவதாக சுயேச்சை வேட்பாளாரின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூர் டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் தலைமையில் வந்த போலீஸார் இரண்டு தரப்பிலும் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர் வழக்கம்போல் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கி நடைபெற்றது.