தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 1,275 பதவிகளுக்கான வாக்குபதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார், புதூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மொத்தம் 1995 பதவிகளுக்கு இன்று வாக்குபதிவு நடைபெறுகிறது.
இதில் ஏற்கெனவே 720 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 1,275 பதவிகளுக்கு 3,560 பேர் போட்டியிடுகின்றனர்.
5 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 994 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது .இதில் 176 வாக்குசாவடி கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 27 ஆம் தேதி தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், உடன்குடி, கருங்குளம் ஆகிய 7 ஊராட்சி ஓன்றியங்களில் உள்ள 1542 பதவிகளுக்கு வாக்குபதிவு நடைபெற்றது. இதில் 69.98சதவீதம் வாக்குகள் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியில் உள்ள வேலவன் புதுக்குளம் வாக்குசாவடியில் நடைபெற்ற வாக்குபதிவின்போது சந்தேகப்படும்படியான நபர்கள் சிலர் வாக்குபோடும் அட்டை அருகே நடமாடியதாக புகார் எழுந்ததையடுத்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆனையம் உத்தரவின்படி இன்று அங்கு மறுவாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.