1972-ஆம் ஆண்டில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆர். தனிக் கட்சி தொடங்கியது, ஆச்சரியமாக இருந்தது. நடிகன் நாடாள முடியுமா என்ற கேள்வியும் பலரின் மனதில் எழுந்தது.
எங்கள் ஊரான அந்தணப்பேட்டையில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திய தருணம். சில இளைஞர்கள் கொடியேற்றி அதிமுக கிளையை ஆரம்பிக்க, நானும் ஒட்டிக்கொண்டேன்.
திண்டுக்கல் வெற்றிக்குப் பிறகு, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிட, எங்கள் ஊரிலிருந்து டிராக்டரில் பிரசாரத்துக்கு கிளம்பினோம். பள்ளி பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற அனுபவத்தால், என்னையும் அழைத்துச் சென்றனர். "கத்தரிக்காய் கொத்தவரங்காய் கூட்டு, கருணாநிதியை உள்ளே வச்சு பூட்டு' என திருமலைராயப்பட்டினத்தில் கோஷமிட்டது இன்றைக்கும் நினைவுக்கு வருகிறது.
டிராக்டரை போலீஸார் அனுமதிக்காததால், மைக் செட்டை தலையில் சுமந்தபடி பிரசாரம் செய்தோம். அன்றைக்கு சொந்த செலவில் ஊரு விட்டு ஊரு சென்று பிரசாரம் செய்தோம். தேர்தல் முடிவை புது பேட்டரி வாங்கிப் போட்டு டிரான்சிஸ்டரில், அதிமுக வெற்றியைக் கேட்டது, மறக்கமுடியாத அனுபவம்.
- அண்ணா அன்பழகன், அந்தனப்பேட்டை.