காசுக்கோ, பொருளுக்கோ விலை போகாமல் வாக்கை நேர்மையாக பதிவு செய்ய வேண்டுமென முன்னணி திரைப்படப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அவர் தமிழக தேர்தல் துறையின் சார்பில் விழிப்புணர்வு பிரசார தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விடியோ காட்சியை தமிழகத் தேர்தல் துறை வெளியிட்டுள்ளது.
அந்த விடியோவின் தொடக்கத்தில், அவர் நிகழ் வெளிச்சத்துடன் டூயட் படத்தில் இருந்து அவர் பாடும் பாடல் வருகிறது. அதன் விவரம்:
"இனி கண்ணீர் வேண்டாம்.... ஒரு கவிதை செய்க... எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க... நம் மண்ணுக்கும், விண்ணுக்கும் பாலம் செய்க....'' வணக்கம். எனது குரலைக் கேட்டதும் நான் எஸ்.பி.பி. எனக் கண்டு பிடித்து இருப்பீர்கள். எனது குரலுக்கு தனித்துவம் உள்ளது. அதுதான் எனது அடையாளம். அதுபோன்று உங்களது அடையாளம் என்ன? உங்களது வாக்குதான் உங்களது அடையாளம். நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு வாக்கும் நாளைய இந்தியாவை உருவாக்கும். ஆண், பெண், திருநங்கையர், கர்ப்பணிகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும். உங்களது வாக்குதான் உங்களது அடையாளம். வரும் தேர்தலில் காசுக்கோ, பொருள்களுக்கோ விலை போகாமல் நேர்மையாக வாக்குப் பதிவு செய்யுங்கள். ஏன் என்றால் உங்களது அடையாளம் விற்பனைக்கு அல்ல'' என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளார்.