திருவாரூர் அருகேயுள்ள கமலாபுரம் எருக்காட்டூர் கிராமம் எனது சொந்த ஊராக இருந்தாலும், மன்னார்குடியில் முதலியார் மாணவர் விடுதியில் தங்கிப் படித்ததால், எனக்கு வாக்குரிமை இருந்தும் முதல் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. மன்னார்குடிக்கு குடியேறிய பிறகு 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், மணிமேகலைப் பள்ளி வாக்குச் சாவடியில் முதல் முறையாக வாக்களித்தேன். அப்போது தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும். பிரபல கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவார்கள். வேட்பாளரின் படத்தைக் காட்டிலும், அவரின் பெயரையும், கட்சியின் சின்னத்தையுமே பிரபலப்படுத்துவார்கள். நோட்டீஸ் அதிகம் இருக்காது. எங்கு பார்த்தாலும் சுவர் விளம்பரங்களாகத்தான் காட்சியளிக்கும். இப்போது இருப்பதுபோல் வாகன வசதிகள் அதிகம் இல்லாததால், வேட்பாளர் ஒரு முறை மட்டுமே வாகனத்தில் நின்றபடி வாக்கு கேட்டுவிட்டு, அடுத்தப் பகுதிச் சென்றுவிடுவார். உள்ளூர் கட்சிக்காரர்களின் திண்ணைப் பிரசாரம் தான் மக்களிடம் அப்போது எடுபட்டது. ஏதாவது ஓர் ஊரில் எங்காவது ஒரு பகுதியில் ரகசியமாக ஒன்று அல்லது இரண்டு ரூபாய் வாக்காளருக்கு வழங்கப்பட்டிருக்கும். அதுவும் தேர்தல் முடிந்த பிறகுதான் தகவல் லேசாகக் கசியும்.
- வி.எம்.செல்வராஜ்(80), மன்னார்குடி.