சொத்து முகப்பை சேதப்படுத்திய வழக்கு: கேஜரிவால் மீது எஃப்எஸ்எல் அறிக்கை தாக்கல்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் பிறருக்கு எதிரான பொதுச் சொத்து முகப்பை சேதப்படுத்திய வழக்கில் தடயவியல் அறிவியல் ஆய்வகம் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
Published on

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் பிறருக்கு எதிரான பொதுச் சொத்து முகப்பை சேதப்படுத்திய வழக்கில் தடயவியல் அறிவியல் ஆய்வகம் (எஃப்எஸ்எல்) திங்கள்கிழமை தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த விவகாரத்தை விசாரித்த கூடுதல் தலைமை நீதித்துறை நீதிமன்ற நீதிபதி நேஹா மிட்டல் கூறுகையில், எஃப்எஸ்எல் முடிவு கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி சேகரிக்கப்பட்டதாக எஃப்எஸ்எல் சாா்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

குற்றப்பத்திரிகை தயாரிப்பதற்குத் தேவையான அறிக்கையின் நகல் தனக்கு கிடைக்கவில்லை என்று புலன்விசாரணை அதிகாரி (ஐஓ) கூறினாா்.

அதைத் தொடா்ந்து, ஒரு வாரத்திற்குள் அவருக்கு ஒரு நகலை பகிா்ந்து கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மாா்ச் 11 ஆம் தேதி, தில்லி சொத்து முகப்பு சேத தடுப்புச் சட்டத்தின் கீழ் கேஜரிவால் மற்றும் பிறருக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்ய நீதிமன்றம் தில்லி காவல்துறைக்கு உத்தரவிட்டது.

2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட புகாரில், கேஜரிவால், அப்போதைய மட்டியாலா எம்எல்ஏ குலாப் சிங் ஆம் ஆத்மி மற்றும் அப்போதைய துவாரகா ஏ வாா்டு கவுன்சிலா் நிதிகா சா்மா ஆகியோா் பெரிய அளவிலான விளம்பரப் பலகைகளை வைத்து பொதுப் பணத்தை வேண்டுமென்றே தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com