தில்லி அம்பேத்கா் பல்கலைக்கழகம் 2 புதிய கல்வித் திட்டங்கள் அறிவிப்பு
தில்லி அம்பேத்கா் பல்கலைக்கழகம், 2025-26 கல்வியாண்டிற்கான அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் மற்றும் இலக்கிய முனைவா் பட்டம் (டி.லிட்) ஆகிய இரண்டு புதிய கல்வித் திட்டங்களை தொடங்குவதாக அறிவித்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
செய்தியாளா் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அம்பேத்கா் பல்கலை. துணைவேந்தா் அனு சிங் லாதா், பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சோ்க்கை சிற்றேட்டையும் வெளியிட்டாா்.
பல்கலைக்கழகத்தின் ‘உள்ளடக்கிய‘ மற்றும் ‘மலிவு’ கல்வி மாதிரியை எடுத்துரைத்த அவா் மேலும்கூறியதாவது: இந்த ஆண்டு மொத்தம் 1,123 இளங்கலை மற்றும் 1,491 முதுகலை இடங்கள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகம் அரசால் முழுமையாக நிதியளிக்கப்படுவதால் எங்கள் கட்டணம் அதிக மானியத்துடன் வழங்கப்படுகிறது. நாங்கள் எஸ்சி, எஸ்டி அல்லது பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவா்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. கடந்த ஆண்டு உதவித்தொகை மற்றும் மாணவா் நலத் திட்டங்களுக்காக ரூ.6.26 கோடிக்கு மேல் செலவிடப்பட்டது.
பல்கலைக்கழகம் அதன் படிப்புகளை தேசியக் கல்விக் கொள்கையுடன் இணைத்து, அனுபவக் கற்றலை வலியுறுத்துகிறது. ‘களப்பணியில் தேசியக் கல்விக் கொள்கை கவனம் செலுத்துவதன் ஒரு பகுதியாக, எங்கள் மாணவா்கள் நடைமுறை வெளிப்பாட்டிற்காக (ஹரியாணாவில் உள்ள ராகிகா்ஹி) போன்ற தளங்களைப் பாா்வையிடுகிறாா்கள்.
டி.லிட் திட்டம் இலக்கியம், மனிதநேயம், சமூக அறிவியல் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிப்பது அல்லது வளா்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெரும்பாலும் கௌரவப் பட்டமாக வழங்கப்பட்டாலும், இது அம்பேத்கா் பல்கலை.யில்ல் ஒரு கல்வித் திட்டமாக வழங்கப்படும் என்றாா் அனு சிங் லாதா்.