திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2,615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகக் கருதப்படும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீப திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவையொட்டி பல ஊர்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில், இந்தாண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிசம்பர் 10-ம் தேதி மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இந்நிலையில், டிசம்பர் 10-ம் தேதி நடக்கும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் டிசம்பர் 11-ம் தேதி நடைபெறும் கார்த்திகை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு டிசம்பர் 9 முதல் 12 வரை 2,615 சிறப்புப் பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையிலிருந்து மட்டும் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கும்பகோணம், மதுரை சேலம், கோவை உள்பட மொத்தம் 2,615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.