அந்தியூர் அருகேயுள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மன் ஊஞ்சல் ஆடியதாக வீடியோ காட்சிகள் வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று தான் பத்ரகாளியம்மன் கோயில். இக்கோயிலில் திருக்கார்த்திகை தினமான டிசம்பர் 10-ம் தேதி இரவு ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. கோயிலில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா மூலம் அது தெரிய வந்தது.
அன்றைய தினம் கார்த்திகை தீபம் என்பதால் கோயில் முழுவதும் விளக்கேற்றி, இரவு வழக்கம் போல் கோயில் நடை சாத்தப்பட்டது. பாதுகாப்பிற்காக கோயிலில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செயல் அலுவலர் அறையைப் பூட்டச் செல்லும்போது அங்கு வைக்கப்பட்டிருந்து டிவியில், சிசிடிவி கேமரா காட்சிகளை கண்காணிக்கும் போது, கருவறையில் நடந்த காட்சி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
video courtesy - MP Media Works
அந்த காட்சியில், வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் கருவறை முன்புள்ள திரைச்சீலையில் அசைவதைப் பார்த்துள்ளனர். ஒருவேளை தீ ஏதாவது பற்றி இருக்கக்கூடுமோ என்று நினைத்துத் தொடர்ந்து சிசிடிவி காட்சியை பார்த்த போது அது தீயில்லை என்பதும் ஏதோ ஒரு உருவம் ஊஞ்சல் ஆடுவது போன்றும் தெரிந்தது.
அம்மனின் கருவறையில் ஒரு பெண் உருவம் செல்வது போன்றும், அதன் பின்னர் திரைச்சீலையைத் தொடுவதுமாக இருந்தது. தொடர்ந்து 2 மணி நேரம் இந்தக் காட்சியைச் செயல் அலுவலர் உள்ளிட்டோர் பார்த்து பிரமித்துப் போய் ஆச்சரியத்துடன் வீடு திரும்பினர்.
மறுநாள் காலை கோயில் நடையைத் திறந்து பார்த்து கருவறை கேமராவில் ஏதேனும் பூச்சி, சிலந்தி இருக்கின்றதா என்று ஆராய்ந்தனர். ஆனால், அப்படி எதுவும் இல்லை எனத் தெரியவந்தது. இரவில் ஊஞ்சல் ஆடியது பத்ரகாளி உருவம் தான் என மக்கள் அனைவரும் சொல்லி வருகின்றனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.