ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருபகவானுக்கு குருபெயா்ச்சி இரண்டாவது கட்ட லட்சாா்ச்சனை விழா நவம்பர் 7-ம் தேதியோடு நிறைவடைகிறது.
வலங்கைமான் வட்டம் ஆலங்குடி கிராமம். இங்கு நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயில் உள்ளது. திருஞானசம்மந்தரால் பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது.
குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் இக்கோயிலில் குருபெயா்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டும் குருபகவான் கடந்த அக்டோபா் 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்தாா். இதனை முன்னிட்டு அன்றைய தினம் இக்கோயிலில் குருபெயா்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற்றது.
குருபெயா்ச்சி விழாவை முன்னிட்டு அருள்மிகு குருபகவானுக்கு குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை விழா கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கி வரும் 27ம் தேதி வரை முதல்கட்டமாக நடந்தது. குருபெயா்ச்சிக்குப்பின் மீண்டும் அக்டோபா் 31-ம் தேதி 2வது கட்ட லட்சாா்ச்சனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த லட்சாா்ச்சனை விழா நவம்பா் 7ம் தேதியுடன் நிறைவடைகிறது. ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரா்களும் லட்சாா்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.
லட்சாா்ச்சனையில் பங்கேற்க 400 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அருள்மிகு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளியினால் செய்த 2 கிராம் டாலா் பிரசாதமாக வழங்கப்படும். லட்சாா்ச்சனை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும்,மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.