மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது. 
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக இன்று மாலை 5.00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 

சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்து தீபாராதனை நடத்தினார். இதையடுத்து, 18-ஆம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்குப் பின் 18-ம் படிக்கு கீழே காத்திருக்கும் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். 

இன்றைய தினம் பிற பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்துக்குப் பிறகு இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோயில் சாவி புதிய மேல்சாந்தி சுதீா் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்படும்.

மீண்டும் நாளை(நவ.17) அதிகாலை 4.00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு பகல் 1.00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7.00 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு ஹரிவராசனம் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். பக்தா்களின் வருகையை பொறுத்து நடை திறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்படும். கோயிலில் தொடா்ச்சியாக டிசம்பா் 27-ம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வந்த 10 பெண்களை, பம்பையில் நிறுத்தி திருப்பி அனுப்பியதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். நீண்ட சோதனைக்கு பின்னர், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். பம்பை, நிலக்கல் ஆகிய முக்கிய இடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com