இன்று காலபைரவாஷ்டமி. சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஆலயத்தின் காவல் தெய்வமாகக் கருதப்படுபவர் பைரவர்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்ததாகும். அதன்படி, கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு கால பைரவாஷ்டமி என்று பெயர்.
கால பைரவர் என்ற உடனேயே எல்லோருக்கும் முதலில் காசிதான் நினைவிற்கு வருகிறது இல்லையா? காசி என்னும் புண்ணிய நகரத்தைக் காக்கும் காவல் தெய்வம் காலபைரவர். காசியில், காலபைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகே காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் காசியாத்திரை செல்பவர்கள் கூட இறுதியில் காலபைரவரைத் தரிசித்தால்தான் காசி யாத்திரை பூரணம் அடைவதோடு யாத்திரையின் பலமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இதையும் படிக்கலாம்: பகைவர்களை வெல்ல பைரவ வழிபாடு செய்யுங்கள்! இதுவும் ஒரு யுக்தி தான்!!
தேய்பிறை அஷ்டமி திதியான இன்று பைரவருக்கு 5 விளக்குகளில் பஞ்ச தீப எண்ணெய் இட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி தனித்தனியாகத் தீபம் ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்னையும் தீரும். காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும்.
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ பைரவர். எனவே, பைரவாஷ்டமியான இன்று பைரவருக்கு விரதமிருந்து வணங்கினால், பைரவரின் அருளோடு அஷ்ட லட்சுமிகளின் அருளும் நமக்குக் கிடைக்கும். கால பைரவரை வழிபடுவோம் சகலவிதமான கவலைகளிலிருந்து விடுபடுவோம்.
பைரவ காயத்திரி மந்திரம்
ஓம் ஷ்வாநத் வஜாய வித்மஹே
சூழ ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயா
பைரவ காயத்திரியைக் கூறுவதால் வாழ்வில் சகல துன்பங்களும் விலகும் என்பது நிதர்சனம்.