திருமணப் பொருத்தம் - தீவினை அகற்றும்! தீர்க்கமான களத்திரம் - நிச்சயம் அமையும்!!

திருமணம் செய்த பின்னர் பிரிவினையின் போது ஒவ்வொரு புதுமணத் தம்பதிகளும் அவர்தம் பெற்றோரும் படும்..
திருமணப் பொருத்தம் - தீவினை அகற்றும்! தீர்க்கமான களத்திரம் - நிச்சயம் அமையும்!!

திருமணம் செய்த பின்னர் பிரிவினையின் போது ஒவ்வொரு புதுமணத் தம்பதிகளும் அவர்தம் பெற்றோரும் படும் துயர் சொல்லி மாளாது என்றே கூற முடியும். அவசர கதியில் உடனடி தீர்வு காணவும் இதனால் நேராது. இவை அனைத்திற்கும் காரணம் அவர்களின் உடனடி திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வது மட்டுமே என்றால் நிச்சயம் வேறு ஏதும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. இது பெற்றோர் நிச்சயித்தவைக்கு பொருந்தும் என்றால், மற்றது எப்படி இருக்கும் என்று வாசகர்களுக்கே விட்டுவிடுகிறேன்.

ஜோதிடர்கள் ஒன்றும் தெய்வங்கள் இல்லை என்றாலும், அவர்களின் சரியான ஆய்வுகளும் முடிவுகளுமே அவர்களை தெய்வஞர்களாக்கிவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. திருமணத்திற்கு ஏற்படும் பிரிவினை என்பது வேரோடு சாய்க்கும் மரம் போன்றதே. இவற்றை பலவிதமாக பிரிக்கலாம். அதாவது, தற்காலிக பிரிவினை, நிரந்தரமாக பிரிவது, சட்டப்படி நிரந்தரமாக பிரிவது, மனக்கசப்பில் பிரிவதும் , இணைவதும், மறு திருமணமும் ஆகும். இவைகளை திருமணத்திற்கு முன்கூட்டியே காண இயலுமா என்றால் நிச்சயம் முடியும் என்றே கூறலாம். 

இவைகளை ஒரு ஜோதிடர் எவ்வாறு காணுவார் என்றால், ஒருவரின் ஜாதகத்தில் கிரஹங்கள் தரும் பிரிவினைகளா, கிரஹ சேர்க்கையில் ஏற்படும் பிரிவினைகளா, ராசி தரும் பிரிவினையா, கோட்சாரம் தரும் பிரிவினையா அல்லது தசாபுத்தியால் ஏற்படும் பிரிவினையா என்பதனை திருமணப் பொருத்தத்தை போதே காண நேரும். ஆனால் இத்தனையையும் ஒவ்வொரு பொருத்தத்தின் போது காண்பதென்பதனை இந்த கட்டுரையை வாசித்த பின்னரே வாசகர்களே அறியமுடியும்.

இதில் ஒவ்வொருவரும் அவசரப் படுத்தும் போது எப்படி முடியும் என்பதனை தயவு செய்து யோசியுங்கள், வாசகர்களே... திருமணத்திற்கு வாங்கும் புடைவைக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் கூட சிலர் தருவதில்லை எனும் போது சற்றே மனம் வலிக்கிறது மேலும் ஜோதிடர்களும் மனிதர்கள் தானே என்பதனை அறியவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இதில் சிலர் மட்டுமே விதிவிலக்கு, அவர்கள் நீங்கள் சொல்லும் வரை காத்திருக்கிறோம் என்று கூறும் போது சற்றே எங்களுக்கு உடலில் அதிக சக்தி பெற்றவர்களாகிறோம். 

திருமணப் பொருத்தத்தின்போது பெண்ணின் பாக்கியாதிபதி ஆணின் ஜாதகத்தில் வலுப்பெற்றிருக்க வேண்டும். அதே போல், ஆணின் தொழில் ஸ்தானாதிபதி பெண்ணின் ஜாதகத்தில் வலுப்பெற்றிருக்க வேண்டும். மேலும், யோனிப் பொருத்தமும், 7 ஆம் பொருத்தமும் நிச்சயம் தேவை. ஒருவரது ஜாதகத்தில், 1 , 2 , 4 ,  5 , 7 , 9 , 10 இடங்கள் நல்ல முறையில் அமைந்தால், அவர் ஒரு யோக காரகர் ஆகிறார்...

ஒரு ஆணின் ஜாதகத்தில் சூரியன், 3, 6, 10, 11ம் இடங்களில் இருந்தால், அவனை நம்பி பெண்ணை கொடுக்கலாம். அப்படிப்பட்ட ஆண், ஆண்மை பொருந்தியவனாகவும் , எதிரிகளை வெல்பவனாகவும், நல்ல தொழில் மற்றும் லாபம் பெற்ற செல்வ சேர்க்கை உள்ளவனாகவும் இருப்பான். ஒரு ஆண் ஜாதகத்தில், லக்கினமும் , 3 ஆம் இடமும் கெடாமல் இருப்பின் அந்த ஜாதகனின் ஆண் தன்மை உடனடியாக நிரூபிக்கப்படும். ஒரு பெண்ணின் லக்கினம் மற்றும் ராசி இரட்டைப்படையான பெண் ராசியில் அமைந்தால், அந்த பெண் மிகுந்த அன்பும் பண்பும் மிக்கவளாக இருப்பாள். 2 ஆம் இடத்தில் சுப கிரகம் இருந்தால் அவள் தீர்க்க சுமங்கலி , அதாவது அவளது கணவருக்கு ஆயுள் பலம் அதிகமாக இருக்கும்.ஒரு பெண்ணின் 4 ஆம் ராசியும் 7 ஆம் ராசியும் நன்றாக அமையப்பெற்றால், அவள் கற்புக்கரசியாக விளங்குவாள்.

ஆண் பெண் இருவரின் லக்கினங்களும் , ராசிகளும் மற்றும் அவைகளின் அதிபதிகளும் ஒருவருக்கொருவர் ஷஷ்டாஷ்டகமாக அமையக்கூடாது / வரக்கூடாது.  

ஜாதகத்தில் 7 ஆம் அதிபதி அதற்கு விரைய ஸ்தானமான 6 ல் இருக்கக்கூடாது. அது நோயுள்ள களத்திரம் அமைய நேரிடும். அதுவே 8 இல் இருந்தால், தொடர் வியாதியுள்ள களத்திரம் அமையும் எனலாம். 7ல் ராகு இருப்பின் மாதவிடாய் மற்றும் கருப்பை கோளாறுள்ள / பாதிப்புள்ள மனைவி அமைவாள்.

7 ஆம் அதிபதி தீய கிரகங்களுடன் இருந்தாலும் சம்பந்தம் பெற்றாலும், 11 ஆம் அதிபதி வர்கோத்தமம் அடைந்தாலும், இரு தார வாய்ப்பை தந்துவிடும். ஒருவரின் ஜாதகத்தில், சுக்கிரன் அதிகமாக வலுக்கவோ அல்லது கெடவோ கூடாது. 2 மற்றும் 7ஆம் அதிபதிகள் தொடர்பு, 7 மற்றும் 9 ஆம் அதிபதிகள் தொடர்பு மற்றும் சுக்கிரன் மற்றும் 9 ஆம் அதிபதி தொடர்பு அதிர்ஷ்டம் உள்ள கணவன் அல்லது மனைவி வாய்க்கும் அமைப்பாகும்.

7 ஆம் அதிபதி நீச்சம், 7 ல் ராகு / கேது மற்றும் 7 ஆம் அதிபதி 6 , 8 ல் இருப்பின் மற்றும் 7 ஆம் அதிபதி பாதகாதிபதி ஆக நேரிடுகையில், அவர்களுக்கு வரப்போகிற கணவன் அல்லது மனைவியால் பிரயோசனம் அதிகம் இல்லை எனலாம். 

இவை அனைத்தையும் பார்த்த பின்னரே 10 வித பொருத்தம் மற்றும் தோஷ சாம்யம் காண்பது சரியாகும். இதனை பெற்றோர்கள் புரிந்து நல்ல ஜோதிடரை அணுகி முடிந்தவரை பிரச்சினைகளை விளக்கி திருமணம் செய்வித்தால் நிச்சயம் திருமணம் எனும் ஆயிரம் காலத்து பயிர் இட்டதற்கு சமம் ஆகும். மறு திருமணம் அல்லது பல திருமண அமைப்பு உள்ள ஜாதகர்களுக்கு முதல் திருமணம் எப்படி பொருத்தம் பார்த்தாலும் பிரிவினை வராமல் போகாது. செவ்வாய், சனி சேர்க்கை அல்லது அவைகளுக்குள் ஏற்படும் பார்வையால் மறுமணம் ஏற்பட காரணம் ஆகிறது.

7ஆம்  அதிபதி 11ல் அல்லது 11 ஆம் அதிபதி 7 ல் இருக்க , பெரியவர்களின் அனுமதியுடன் மறு திருமணம் நடக்கிறது. செவ்வாய் , சனி தரும் திருமணம் பெரும்பாலும் திருட்டுத்தனமாக மட்டுமே இருக்கும்.. 3 , 7 , 11 ஆம் வீடுகளின் தொடர்பால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திருமணம் ஏற்பட சுட்டிக்காட்டும். இப்படிப்பட்டவர்கள் திருமணத்தால் சந்தோஷம் அடையமாட்டார்கள். திருமணத்திற்கும் சந்தோஷத்திற்கும் சம்பந்தம் இல்லை, தங்களின் தனிமையை மட்டும் போக்கிக்கொள்வார்கள். 

ஒவ்வொரு லக்கினங்களுக்கும்  மறு திருமணம் செய்துகொள்ளக்கூடிய ஆசை ஏற்படும் காலங்களைப்பற்றி வேறுவொரு கட்டுரையில் காண்போம்.

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு : 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com