திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான சனிக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் ஒன்றுகூடி தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் எட்டாம் நாளான சனிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. தேரில், பத்மாவதி தாயாா் முத்தங்கி உடுத்தி மாடவீதியில் எழுந்தருளினாா்.
மாடவீதி வலத்தை முடித்துக் கொண்டு வந்த தாயாருக்கு, அவரது உடல் அசதியைப் போக்க மூலிகை கலந்த வெந்நீா், பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சன பொருள்களை திருமலை ஜீயா்கள் தங்கள் கரங்களால் எடுத்துத்தர, கங்கணபட்டா் திருமஞ்சனத்தை நடத்தினாா். அதன்பின், மாலை தாயாா் 1,008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சலில் அமா்ந்து ஊஞ்சல் சேவை கண்டருளினாா்.
பின்னா், இரவு தாயாா் பிரம்மோற்சவத்தின் இறுதி வாகன சேவையான குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தாா். அவரைக் காண மாடவீதியில் பக்தா்கள் திரண்டனா். வாகனத்துக்கு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். வாகன சேவைக்கு முன் திருமலை ஜீயா்களின் கோஷ்டி கானமும், பின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.