திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 28-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. நவம்பர் 2-ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா நிகழாண்டில் அக். 28-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ. 2-ஆம் தேதி நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு முதல் நாளான அக். 28-ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 5.30 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலை புறப்படும் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மற்ற கால பூஜைகள் வழக்கம்போலும் நடைபெறுகிறது.
கந்த சஷ்டி 2-ஆம் நாள் முதல் 5-ஆம் நாள் வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.
நவ. 2-ஆம் தேதி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1.00 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் வைத்து சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நவ. 3-ஆம் தேதி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, அதிகாலை 5 மணியளவில் தெய்வானை அம்மன் தவசுக் காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கோயிலில் வைத்து திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.
திருவிழா நாள்களில் காலை, மாலையில் கோயில் சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் பக்திச் சொற்பொழிவு நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் சா.ப.அம்ரித், தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.