தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)

2020-ம் சார்வரி தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)

2020-ம் சார்வரி தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடையவும். 

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

இந்த சார்வரி தமிழ் புத்தாண்டில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து புரிந்து கொள்வீர்கள். பழைய பழக்கவழக்கங்களை விட்டுக் கொடுக்காமல் கடைபிடிப்பீர்கள். குழந்தைகளைக் கட்டுப்பாட்டுடன் வளர்ப்பீர்கள். ஒன்றும் தெரியாத அப்பாவி என்று நினைக்கப்பட்டவர்கள் எதிலும் முன்னணியில் நிற்பார்கள். தெளிவாக தம் கருத்தை எடுத்துரைப்பாகள். ஆன்மிகத்திலும் கருத்துடன் ஈடுபடுவார்கள். செய்தொழிலில் புதிய அனுபவங்களைப் பெறுவார்கள். கொண்ட கொள்கையை கடைசி வரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அரசு வழியில் ஆதரவு தேடி வரும். எடுத்த காரியங்களை தடையின்றி முணுமுணுக்காமல் செய்து முடிப்பீர்கள். நீங்கள் சார்ந்துள்ள துறையில் முக்கியஸ்தர் என்று பிரபலமடைவீர்கள். உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். உடன்பிறந்தோருக்கும் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். மற்றவர்களுக்காக தன்னை வருத்திக் கொண்டு சில தியாகங்களைச் செய்வீர்கள். பெற்றோர் வழியிலும் இணக்கமான சூழ்நிலை நிலவும். அவர்களுக்கு இருந்த உடலுபாதைகளும் மறையும்.

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சிலர் புதிய நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். படிப்படியாக வருமானம் அதிகரிக்குத் தொடங்கும். ஸ்பெகுலேஷன் போன்ற பங்கு வர்த்தகத்துறையிலிருந்தும் லாபம் கிடைக்கும். பொறுமையுடனும் பொறுப்புடனும் கடமை ஆற்றுவீர்கள். அனுபவஸ்தர்களின் அறிவுரைகளைப் பெறுவீர்கள். இல்லத்தில் தடைப்பட்டிருந்த திருமணம் நடந்தேறும். புத்திர பாக்கியத்திற்குக் காத்துக் கொண்டிருந்தவர்கள் மழலைச்செல்வங்களைப் பெறுவார்கள். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவார்கள், பழைய காலத்தில் திருட்டுப் போன பொருள்களும் திரும்பக் கிடைக்கும். வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும். அசையாச் சொத்துகளின் மூலமும் வருமானம் வரத்தொடங்கும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகளும் கிடைக்கும். நெடுநாளாக பாதிக்கப்பட்டிருந்தவர்கள் உடலுபாதைகளிலிருந்தும் மீண்டு வந்து விடுவீர்கள். உங்கள் உதவும் குணத்தை அனைவரும் பாராட்டுவார்கள். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதற்க்கொப்ப உங்கள் அனுபவ அறிவால் புதிய ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். ஆன்மிகத்தில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வீர்கள். உடன்பிறந்தோருக்கும் உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். பெருந்தன்மையுடந் நடந்துகொள்வீர்கள். மேலும், சோம்பலின்றி சகல காரியங்களிலும் ஈடுபட்டு வெற்றியடையும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இரண்டும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பாகள். அலுவலகத்தில் மிடுக்குடன் வலம் வருவார்கள். சக ஊழியர்கள் உங்களிடம் பகைமை மறந்து நட்புப் பாராட்டுவார்கள். அதேநேரம் புதிய பொறுப்புகளில் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டி வரும். அலுவலகத்தில் சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்ளுவீர்கள். வியாபாரிகளுக்கு நிலவி வந்த போட்டி பொறாமைகள் குறைந்து சுமுக நிலைமை உண்டாகும். கவனத்துடன் இருந்து வியாபாரத்தை விரிவுபடுத்தவும். கொடுக்கல் வாங்கல்களில் சிரமம் உண்டாகலாம். சில நேரம் நண்பர்களுடனும் கூட்டாளிகளுடனும் மனக்கசப்பு உண்டாகலாம். விவசாயிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். புதிய குத்தகைகள் முயற்சி இன்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். புதிய பயிர் உற்பத்தியிலும் இறங்குவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்யும் விவசாயக்கூலிகளைக் கடிந்து கொள்ள வேண்டாம்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். புதிய உத்வேகத்துடன் வேலைகளைச் செய்வீர்கள். வழக்குகளில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகி லாபத்துடன் வெளிவருவீர்கள். தொண்டர்களின் பாராமுகத்தைக் கண்டு கொள்ளமாட்டீர்கள். கலைத்துறையினர் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்படுவீர்கள். சக கலைஞர்களிடம் தேவையான உதவிகளைக் கேட்டுப் பெறுவீர்கள். சில ஒப்பந்தங்கள் நிறைவு தருவதாக இராது. பெண்மணிகள் கணவரிடம் அன்பு பாசம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. மாணவமணிகள் சிறு சிறு குழப்பங்களைச் சந்திப்பாகள். நண்பர்களுடன் வம்புச் சண்டையில் ஈடுபட வேண்டாம். படிப்பில் முழு அக்கறை காட்டினால்தான் சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற முடியும்.

பரிகாரம்: விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

இந்த சார்வரி தமிழ் புத்தாண்டில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் அமைதி நிறையும். உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். பெற்றோர்களுடன் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டு உங்கள் காரியங்களைச் சாதிக்குக் கொள்வீர்கள். பிரசித்திப் பெற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களில் நட்பும் ஆதரவும் கிடைக்கும். இதனால் புதிய பயிற்சிகளில் ஈடுபட்டு சாதனைகளைச் செய்வீர்கள். இல்லத்தில் தாமதமாகி வந்த திருமணம் கைகூடும். அதோடு குழந்தை இல்லாதவர்களுக்குக் மழலை பாக்கியமும் உண்டாகும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். செய்தொழிலில் பகைமையோ அல்லது எதிரிகளோ இல்லாமல் எதிர்பார்த்த வருமானம் வரத்தொடங்கும். சிலர் தந்தையுடன் சேர்ந்து குடும்பத் தொழிலை நடத்தத் தொடங்குவார்கள். உடல்நலம் மனவளம் இரண்டும் சிறப்பாக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவைகளைக் கற்றுக்கொள்வீர்கள். உங்கள் ஆலோசனையை அனைவரும் கேட்பார்கள். படிப்பறிவை விட அனுபவ அறிவினால் காரியங்களைத் திறம்பட செய்து முடிப்பீர்கள் என்றால் மிகையாகாது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் கிடைத்து புகழ் ஏணியில் ஏறத்தொடங்குவீரிகள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்குத் தக்க உதவிகள் செய்வீர்கள். ஏமாற்ற நினைப்பவர்களையும் திருத்தி விடுவீர்கள். உணவு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருந்து வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படாமல் காத்துக்கொள்வீர்கள். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். அந்தத் துறைகளிலிருந்து உங்கள் கோரிக்கைகள் பூர்த்தியாகும். சொந்த வீடு கட்ட அஸ்திவாரம் போடுவீர்கள். கடன் பிரச்னைகள் இறங்குமுகமாக இருக்கக் காண்பீர்கள். குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கி, வட்டி அதைவிட அதிகமாகி பின்னர், பழைய கடன்களையும் சேர்த்து அடைத்து விடுவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக நடைபெறும் வழக்கில் வெற்றி கிடைக்கும். இதனால் அசையாச் சொத்துகளின் சேர்க்கையும் உண்டாகும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணங்களைத் திறம்படச் செயல்படுத்துவீர்கள். ஆன்மீகத்திலும் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். புதிய ஆலயங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். குழந்தைகளையும் ஆன்மிகத்தில் ஈடுபடுத்தும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகங்களில் சக ஊழியர்களிடமும் பரஸ்பரம் அன்பு பாராட்டுவீர்கள். மேலதிகாரிகளின் அணுமுறை சற்று மாறுபடும். கிடைக்கின்ற ஊதியத்தில் சிக்கனத்தைக் கையாளவும். சிலருக்கு விரும்பத்திற்கேற்றபடி இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகள் சுக செளகர்யங்களை பார்க்காமல் உழைப்பீர்கள். எடுத்த காரியங்களில் சில விஷயங்களை சிறிது காலம் தள்ளிப்போடலாம் என்று கருதும் காரியங்களைத் தள்ளிப்போடவும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பாகவே நடக்கும். விவசாயிகளுக்கு வருமானம் குறையும்.செலவும் கூடும். ஆனாலும் தைரியத்திற்குக் குறைவு இராது. விளைபொருள்கள் விற்பனையும் நல்ல முறையில் நடக்கும். கால்நடைகளையும் பராமரிப்பீர்கள். உங்கள் கெளரவத்தைத் தக்க வைத்துக்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் வளரும். செய்யும் செயல்களில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் காரியங்களைச் செய்வீர்கள். கட்சி மேலிடத்தின் கட்டளையை பெற்ற பின்னரே தொண்டர்களின் ஆதரவு நல்ல முறையில் இருக்கும். கலைத்துறையினருக்கு பெயரும் புகழும் சிறக்கும். உங்கள் திறமையால் அனைவரையும் அசத்துவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். ரசிகர்களின் பெரும் ஆதரவோடு புதிய ரசிகர் மன்றங்களைத் திறப்பீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். கணவருடன் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். தொலைதூரச் செய்திகள் மகிழ்ச்சிகரமான விஷயத்தைத் தாங்கி வரும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். குழந்தைகள் வகையிலும் தாய் வகையிலும் சிறு சிறு தொல்லைகள் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப விசேஷங்களுக்காக ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளின் தினமும் நன்றாகப் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதை ஒருநிலைப்படுத்த யோகா, பிராணாயாமம் போன்ற பயிற்சிகள் செய்யலாம்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

இந்த சார்வரி தமிழ் புத்தாண்டில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரம் சிறப்பாக அமையும். செய்தொழிலில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணமுடை என்கிற பேச்சிற்கே இடமிராது. தீவிர முயற்சி செய்து புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணம் வசூலாகும். பழைய கடன்களையும் திறம்பட செலுத்தி விடுவீர்கள். புதிய நண்பர்களும் கிடைப்பார்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் சிபாரிசுக் கிடைத்து புதிய பதவிகளையும் பெறுவீர்கள். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளின் மூலம் கஷ்டப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். சரியான நேரத்தில் ஆகாரத்தையும் எடுத்துக் கொள்வீர்கள். அடிக்கடி பயணங்கள் செய்யும் யோகமும் உண்டாகும். எவரையும் அநாவசியமாக நம்ப வேண்டாம். அதிகமாக பகைத்துக் கொள்ளவும் வேண்டாம். குடும்ப வாழ்க்கைச் சீராகவே செல்லும். அந்நியர்களின் தலையீடு என்று எதுவும் ஏற்படாது. கஷ்டப்படும் உறவினர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்வீர்கள். நேர்வழியில் உங்கள் காரியங்களைச் செய்து முடிப்பூர்கள். மனசாட்சிக்கு விரோதமாகவும் நடக்க மாட்டீர்கள்.

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் மூத்த சகோதரர்களுடன் கலந்து சுமுகமாக பாகப்பிரிவினாகளைச் செய்து கொள்வீர்கள். தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் அனைத்தும் திடீரென்று இல்லத்தில் நடந்தேறும். அடுத்தவர்களைச் சார்ந்து செய்து வந்த காரியங்களை நீங்கள் தன்னிச்சையாகச் செய்து வெற்றி பெறுவீர்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். குழந்தைகளை மேற்படிப்பு படிக்க வெளிநாட்டிற்கு அனுப்புவீர்கள். ஒரு சிலருக்கு பொதுமக்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பொது காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அனைத்துப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளக்கூடிய துணிவு ஏற்பட்டு விடும். தாமதமாகி வந்த வம்பு வழக்குகளில் சாதகமான முடிவு ஏற்படும். உங்கள் எதிரிகளிடமும் சமரசமாகப் போவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகளும் உண்டாகும். அதேநேரம் உடன்பிறந்தோரிடம் பெரிய உதவிகளை எதிர்பார்க்க முடியாது. அதனால் அவர்களைப் பகைத்துக்கொள்ளாமல் தாமரை இலைத் தண்ணீர்போல் பழகி வரவும். நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் நிபுணத்துவம் பெறுவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் விட்டுக்கொடுத்து சிநேகமாகப் பழகுவீர்கள். போட்டியாளர்களிடம் பகைமை நீங்கி பரஸ்பரம் நம்பிக்கை உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்புகள் குறைந்து காணப்படும். மேலதிகாரிகளிடமும் சக ஊழியர்களிடமும் இணக்கமான சூழ்நிலைகள் உருவாகும். சிலருக்கு அலுவலக வேலைகளில் எதிர்பார்த்த திடீர் திருப்பங்கள் உருவாகும். இது சாதகமானதாக அமைந்து வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். மேலதிகாரிகளிடமும் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். பணவரவிற்கு ஒன்றும் வராது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. மேலும் கடும் போட்டிகளையும் சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகளைச் செய்ய வேண்டாம். கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக முடியும். கூட்டாளிகளும் சாதகமாக இருப்பார்கள். விவசாயிகள் செலவு குறைந்த மாற்று பயிர்களைப் பயிர் செய்து பலன் பெறுவீர்கள். கொள்முதலில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் சுபச்செய்திகள் வரும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

அரசியல்வாதிகள் சிறிய அலைச்சல்களைக் காண்பார்கள். எதிர்க்கட்சியினரும் உங்கள் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பார்கள். கட்சி மேலிடமும் தொண்டர்களும் சாதகமாக நடந்துகொள்வார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த பெயர், புகழ் கிடைக்கத் தாமதமாகும். பொறுமையுடனும் கவனத்துடனும் வேலைகளைச் செய்வீர்கள். வருமானத்திற்கு குறைவு வராது. சிலருக்கு விருதுகள் கிடைக்கும். சக கலைஞர்களுக்கு உற்ற நேரத்தில் உதவுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான உறவு சுமாராகவே இருந்தாலும் குடும்பத்தினரின் மதிப்பு தொடரும். சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபத்திரவங்கள் வர வாய்ப்புள்ளதால் உணவு விஷயங்களில் எச்சரிக்கை தேவை. மாணவமணிகள் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைக்கவேண்டும். உழைப்பிற்கேற்ற கணிசமானமதிப்பெண்களைப் பெறுவீர்கள். உடன்பிறந்தோரிடம் தக்க உதவிகள் எதிர்பார்க்கலாம். ஆசிரியர்கள் கனிவுடன் பேசுவார்கள். உற்சாகத்துடன் விளையாட்டில் ஈடுபடும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

இந்த சார்வரி ஆண்டு ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் இருந்த மிதமான போக்கு மாறி இனி படிப்படியான வளர்ச்சி உண்டாகத் தொடங்கும். முயற்சிக்கும் காரியங்களில் நல்லதொரு முன்னேற்றம் அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். மருத்துவச் செலவுகளும் குறையும். பூர்வீகச் சொத்து இல்லாதவர்களுக்கு வேறு விதத்தில் சொத்துகளும் வந்து சேரும். விரோதிகளும் நண்பர்களாக மாறுவார்கள். மனதில் இருந்து வந்த மனச்சஞ்சலம் விலகி, புத்தெழுச்சியும் புதிய எண்ணமும் முயற்சிகளும் காரியங்களில் வேகமான முன்னேற்றத்தை ஏற்படுத்திவிடும். வழக்கு பிரச்னைகளில் நல்லதொரு திருப்பமும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பங்களும் சஞ்சலங்களும் விலகி, நல்ல நிம்மதி சூழும். சமூகத்தில் உயர்ந்தோரிடம் நற்பெயரெடுப்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் பெயர் புகழ் உயரக் காண்பீர்கள். சமூகத்தில் புதிய பொறப்புகளும் கிடைத்து மக்களுக்குப் பணியாற்றும் வாய்ப்புகளும் கிடைக்கும். கணிசமான வருமானம் வருவதால் புதிய உபகரணங்களையும் வாங்குவீர்கள். வங்கி கடன்கள் கிடைத்து புதிய வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு வெளியூர், வெளிநாடு சென்று தொழில் புரியும் பாக்கியமும் உண்டாகும். குறிப்பாக, சொல்வதென்றால், அனைத்து விஷயங்களிலும் செல்வம் செல்வாக்கு பெறுவதற்குரிய காலகட்டமாக இது அமைகிறது.

இந்த கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். பயணங்களால் நன்மைகளைப் பெறுவீர்கள். குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு சுக பிரசவத்தில் குழந்தைபாக்கியம் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரியங்களும் இல்லத்தில் நடைபெறும். ஆலய திருப்பணிகளில் ஈடுபடுவதும் புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வதும் கூடிவரும். வெளிநாடு சென்று வர முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். வராத கடன் என்று நினைத்திருந்த கடன் கைவந்து சேரும். வழக்குகளில் சாதகமான திருப்பங்களைக் காணலாம். நண்பர்கள் உற்றார் உறவினர்கள், உடன்பிறந்தோரிடம் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். செய்தொழிலில் புதிய முயற்சிகளை புகுத்துவீர்கள். பெற்றோருடன் இருந்து வந்த முரண்பாடுகள் நீங்கி இணக்கமாக நடந்துகொள்வீர்கள். சிலர் பழைய தொழிலை அடியோடு மாற்றி விட்டு புதிய தொழில் நடத்துவதற்கு காலடி எடுத்துவைப்பீர்கள். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். உடல்ஆரோக்கியமும் படிப்படியாக முன்னேறிவிடும். போட்டி பொறாமை கொண்டவர்கள் வெகுதூரம் சென்று நீங்கள் தனிக்காட்டு ராஜாவாக செயலாற்றும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் மனதைக் கட்டுப்படுத்தி செயலாற்றினால் தோல்வியில் இருந்து தப்பிக்கலாம். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை தக்க நேரத்தில் சக ஊழியர்களின் உதவியோடு திறம்பட கையாள்வீர்கள். வருமானம் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். பயணங்களைத் தவிர்த்திடுதல் நல்லது. வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் சில முடிவுகளை தனித்தே எடுக்கவும். எதிர்பார்த்த வங்கிக்கடன்கள் கிடைத்து வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். வராது என்று நினைத்திருந்க பணம் கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பேச்சினால் விரோதம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. எல்லா காரியங்களிலும் தடையுடன் வெற்றி பெறுவீர்கள். காய்கறி, பால் வியாபாரம் சற்று லாபம் தரும். புதிய நிலங்களை வாங்கும்போது வில்லங்கங்களைப் பார்த்து வாங்கவும்.

அரசியல்வாதிகள் கட்சியில் நல்ல நிலைக்கு வளர்வீர்கள். தொண்டர்கள் சிறிது அலட்சியம் காட்டுவார்கள். அவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் எண்ணங்களை நிறைவேற்றலாம். கலைத்துறையினர் அதிக முயற்சிக்கிப்பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ரசிகர்களின் அபிமானத்தைப் பெறுவீர்கள். தொழிலில் மறைமுகப்போட்டிகள் அதிகமிருப்பதால் மிகுந்த கவனத்துடன் உழைத்து விருதுகளையும் பாராட்டையும் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருக்கும். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷமடைவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள் பெற்றோரிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறும். ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். உடல் நலம் பலமடைய தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com