சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைகளுக்காக பிப்.13-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகிறது.
அதன்படி, மாசி மாத பூஜைகளுக்காக பிப்.13-ம் தேதி ஐயப்பன் கோயில் சன்னிதானத்திற்கான நடை மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைத்து தீபாராதனை காட்டுகின்றனர்.
அன்றைய தினம் மற்ற சிறப்புப் பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். மறுநாள்(பிப்.14)-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். பிப்ரவரி 18-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகிறது.