திருப்பதியில் உள்ள கபில் தீா்த்தம் கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5ம் நாள் காலை பல்லக்கில் கபிலேஸ்வரஸ்வாமி காமாட்சி அம்மன் சமேதராய் சோமஸ்கந்தமூா்த்தியாக மாடவீதியில் வலம் வந்தாா்.
திருப்பதி கபில் தீா்த்தத்தில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் மகாசிவராத்திரியை ஒட்டி கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன் 5ம் நாளான செவ்வாய்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை பல்லக்கில் கபிலேஸ்வரஸ்வாமி காமாட்சி அம்மன் சமேதராய் சோமஸ்கந்தமூா்த்தியாய் மாடவீதியில் வலம் வந்தாா்.
பக்தா்கள் அவருக்கு கற்பூர ஆரத்தி அளித்து வழிபட்டனா். மாடவீதி வலத்திற்கு பின் சோமஸ்கந்தமூா்த்திக்கும், காமாட்சி அம்மனுக்கும் கோயில் வளாகத்தில் காலை 11 மணிக்கு பால், தயிா், தேன், இளநீா், விபூதி, சந்தனம் உள்ளட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
பின் மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அதிகார நந்தி வாகனத்தில் உற்சவ மூா்த்திகள் மாடவீதியில் வலம் வந்தனா். வாகன சேவையில் பக்தா்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனா்.
வாகன சேவையின் போது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கோயிலிலும் ஆன்மீக நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டது.