ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது?

மாதங்களில் சிரேஷ்டமான மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது ஆருத்ரா தரிசனம்.
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது?

மாதங்களில் சிரேஷ்டமான மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது ஆருத்ரா தரிசனம். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும் தான் திரு என்னும் அடைமொழி சொல்லப்பட்டிருக்கிறது. திருவாதிரையை வடமொழியில் ஆருத்ரா என்று கூறுவார்கள். ஆருத்ரா தரிசனத்திற்குக் காரணமான புராணக் கதை ஒன்றை இங்குப் பார்ப்போம்.

பஞ்ச பூதங்களின் இயக்கத்திற்கும் ஆதாரமாக இருக்கும் ஸ்ரீ சிவபெருமானை நிந்தித்து, ஒருமுறை தாருகாவனத்தில், முனிவர்கள் ஒன்று கூடி, முக்கண்ணனுக்கு எதிராக வேள்வி ஒன்றை நிகழ்த்தினார்கள். அதாவது, அவர்களின் கோட்பாட்டின்படி, கர்மத்தை மட்டும் செய்தால் போதுமானது. கடவுள் என்பவர் கிடையாது என்பதுதான். அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டி, கயிலைநாதன், பிட்சாடனர் ரூபமெடுத்து, பிட்சைக் கேட்டு, முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். பிட்சாடனரைக் கண்ட முனி பத்தினிகள் அனைவரும், அவரின் பின்னால் போகத் தொடங்கினார்கள்.

இச்செயலைக் கண்ட முனிவர்கள், மிகுந்த கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தார்கள். வேள்வித்தீயினில், மத யானை, மான், உடுக்கை, முயலகன். தீப்பிழம்பு ஆகியவற்றைத் தருவித்து, அனைத்தையும், ஸ்ரீ சிவபெருமான் மேல் ஏவி விட்டார்கள். சர்வேசன் ஆனவர், மத யானையைக் கொன்று அதன் தோலைத் தரித்துக் கொண்டார். மான், உடுக்கை, அக்னி அனைத்தையும் தானே சுவீகரித்துக் கொண்டார். முயலகனின் மேல் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியபடி நடனம் ஆடி, முனிவர்கள் உண்மையை அறியச் செய்தார். அதுவே ஆருத்ரா தரிசனம் என்று கூறப் படுகிறது.

ஸ்ரீ நடராஜப் பெருமாள் 108 நடனங்களை ஆடி இருக்கிறார். அவர் தனியாக ஆடியது 48. ஸ்ரீ உமா தேவியுடன் சேர்ந்து ஆடியது 36. தேவர்களுக்காக ஆடியது 12. ஸ்ரீ திருமாலுடன் ஆடியது 9. முருகனுடன் ஆடியது 3. 

பஞ்ச பூதங்களான ஆகாயம் என்பதற்கு சிதம்பரம் என்றும். அக்னி என்பதற்கு திருவண்ணாமலை என்றும், நீர் என்பதற்கு திருவானைக்காவல் என்றும், காற்றுக்கு காளஹஸ்தி என்றும் , நிலத்திற்கு காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்றும் இவைகளின் பெருமைகளைக் கூறும் வண்ணம்  இந்த புண்ணியத் தலங்கள் அமைந்திருக்கின்றன.  இதில் சிதம்பரம் தான் முதன்மையாகச் சொல்லப்படுகிறது.

ஸ்ரீ முக்கண்ணனுக்கு வருடத்தில் ஆறு முறைகள் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மூன்று முறைகள் திதியன்றும், மூன்று மறைகள் நட்சத்திரம் அன்றும் செய்யப்படும் அபிஷேகத்தில், திருவாதிரை அன்று செய்யப்படும் அபிஷேகமே விசேஷமாகச் சொல்லப்படுகிறது. 

ஆருத்ரா தரிசனம் அன்று களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது? 

முந்தைய காலத்தில் சேந்தனார் என்கிற பெயர் கொண்ட விறகு வெட்டி ஒருவர் இருந்தார். அவர் சிறந்த சிவ பக்தர். தினமும் ஒரு சிவ பக்தருக்கு ஆகாரம் அளித்துவிட்டுத் தான் உண்ணுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் நல்ல மழை பெய்ததில், வெட்டிய விறகெல்லாம் ஈரமாகி விட்டது. அதை விற்க முடியாமல் போனதால், கையில் பணம் இல்லாமல் போனது. அதனால் மனைவிடம் வீட்டு சிலவிறகு பணம் கொடுக்க முடியாமல் போனது.

அன்றைய தினம் ஒரு சிவபக்தர், சேந்தனாரின் இல்லம் வந்து, பிட்சைக் கேட்டார். அவரின் மனைவி, வீட்டில் இருந்த அரிசி மாவையும் வெல்லத்தினையும்  சேர்த்து களி  செய்தார். வீட்டில் மிகுதியிருந்த ஏழு காய்களில் கூட்டு ஒன்றினைச் செய்து, சிவனடியாரின் பசியைப் போக்கினார். பிறகே இருவரும் உண்டார்கள். அடுத்த நாள் கோயிலை வழக்கம் போல் திறந்த அர்ச்சகர், பகவானின் கருவறையில் களியும் கூட்டும் சிதறி இருப்பதைப் பார்த்தார். பிறகு உண்மையை உணர்ந்தார். சேந்தனாரின் பக்தியை உலகுக்குத் தெரியப்படுத்த ஆண்டவனே பிட்சாடனர் ரூபத்தில் வந்தார் என்பதைக் கூறவும் வேண்டுமோ?

பஞ்சபூத ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்பவர்கள், முதலில் சிதம்பரம், அடுத்து காளஹஸ்தி, அடுத்து திருவண்ணாமலை, அடுத்து திருவானைக்காவல், அடுத்து காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்கிற கிராமத்தில் முடிக்க வேண்டும். ஸ்ரீ நடராஜப் பெருமானின்  ஆடல் கலையைத் தரிசித்தாலே புண்ணியம் என்று கூறப்படுகிறது.

ஆருத்ரா தரிசனம் அன்று களி, கூட்டு செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நைவேத்தியம் செய்து சமர்ப்பித்து, முடிந்தவரை சிவ ஸ்தோத்திரங்களைக் கூற வேண்டும். நோன்பு மேற்கொள்கிறவர்கள் , மார்கழி திருவாதிரையில் நோன்பைத் தொடக்கி, ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் அன்றும் நோன்பு மேற்கொண்டு ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். எல்லாம்வல்ல ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ நடராஜப் பெருமான் எல்லா வளங்களையும் அனைவருக்கும் அருளட்டும்.

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com