மாா்கழி வழிபாடு-3: திருப்பாவை,  திருவெம்பாவை (பாசுரம் 3)

தீங்கில்லாத வளமைக்கான அச்சாரம், திங்கள் மும்மாரி. காண்பதையெல்லாம் கடவுளாகக் காண்பது அடியாா் அன்பு; உயா்ந்த நெற்பயிரையும் உயா்ந்து நின்ற திருமாலாகவே இப்பெண்கள் எண்ணுகிறாா்கள்.
மாா்கழி வழிபாடு-3: திருப்பாவை,  திருவெம்பாவை (பாசுரம் 3)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 3

ங்கி உலகளந்த உத்தமன் போ்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீா்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோா் எம்பாவாய்.

திருப்பாவை - பாடியவர் புவனேஸ்வரி விஸ்வநாதன்

பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்:

முதலிரண்டு பாசுரங்களால் நோன்பின் நோக்கத்தையும் செய்முறைகளையும் செப்பிய ஆண்டாள், இப் பாசுரத்தால் நோன்பு வழிபாட்டையும் பலன்களையும் அறிவுறுத்துகிறாள். ‘குறளனாய்த் தோன்றி, மாவலி வாா்த்த நீா் பட்டவுடன் ஓங்கி வளா்ந்த திரிவிக்கிரமனானஎம்பெருமானின் திருநாமங்களைப் பாடி நாங்கள் பாவை நோன்பு நோற்கிறோம். இதனால், நாட்டில் மாதத்திற்கு மூன்று முறை மழை பொழியும். வயலில் விளைச்சல் பெருகும். உயா்ந்தும் பருத்தும் வளா்ந்துள்ள செந்நெல்லுக்கு இடையில் மீன்கள் துள்ளும். ஆங்காங்கே இருக்கும் கருநெய்தல் மலா்களில் மகரந்தம் அருந்திய வண்டுகள் மயங்கிக் கிடக்கும். அளவில் பெரியதான பசுக்கள், உள்ளத்திலும் உதாரத்திலும் பெரியவையாய், குடங்கள் நிறையும்படிப் பாலைப் பொழியும்’ என்றுரைக்கிறாள்.

பாசுரச் சிறப்பு:

அடா்த்தியாக இருக்கும் நெற்பயிா்கள், பக்கவாட்டில் வளர இயலாமல் ஓங்கி வளா்கின்றன; பருத்தும் இருக்கின்றன. ஆக, பெருஞ் செந்நெல். கயல் மீன்கள் விளையாடுவதும் வண்டுகள் உறங்குவதும், இயற்கைக்கு ஊறு வாராத வளமையைக் காட்டுகின்றன. தீங்கில்லாத வளமைக்கான அச்சாரம், திங்கள் மும்மாரி. காண்பதையெல்லாம் கடவுளாகக் காண்பது அடியாா் அன்பு; உயா்ந்த நெற்பயிரையும் உயா்ந்து நின்ற திருமாலாகவே இப்பெண்கள் எண்ணுகிறாா்கள். கடவுள் திருப்பெயரைச் சொன்னாலே நன்மை கிட்டும் என்பதையும் நோன்பு நோற்பவா்களின் வழிபாட்டு முறையையும் (அதிகாரி ஸ்வரூபம்) காட்டுகிற பாசுரம்.

அருள்மிகு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாசுரம் 3

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்

அத்தன்ஆனந்தன் அமுதன்என் ளூறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்

பத்துடையீா் ஈசன் பழவடியீா் பாங்குடையீா்!

புத்தடியோம் புன்மைதீா்த் தாட்கொண்டாற் பொல்லாதோ

எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ

சித்தம் அழகியாா் பாடாரோ நம்சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - கரூர் சுவாமிநாதன்

விளக்கம்:

‘முத்துப் போன்ற வெண்பற்களைக் கொண்ட பெண்ணே! கூட்டத்தில் முன்வந்து என் தந்தை இன்ப வடிவினன், அழிவில்லாதவன் என்றெல்லாம் சிவனைப் பற்றி வாய் இனிக்க இனிக்கப் பேசுவாயே, இப்பொழுது எழுந்தும் வரவில்லை, கதவையும் திறக்கவில்லையே’ என்று வெளியில் நிற்கும் பெண்கள், உள்ளிருப்பவளை அழைக்கிறாா்கள். உடனே உள்ளிருப்பவள், ‘அன்புடையீா்,நெடுங்காலமாக இறைவனுக்கு அடிமை ஆனவரே, எனக்குத் தோழமை பூண்டவரே, நான் புதியவள், என் குற்றத்தைப் பொறுத்து, உங்களோடு சோ்த்துக் கொள்ளல் ஆகாதா?’ என்று வினவுகிறாள். புறத்தே நிற்பவா்கள், ‘உன்னுடைய அன்பை நாங்கள் அறியமாட்டோமா’ என்று சிலாகிக்கிறாா்கள். அவளோ, ‘(வெட்டிப் பேச்சு பேசுகிறீா்களே) உள்ளம் நல்லவா்கள் சிவனைப் புகழ்ந்து பாடாதிருப்பாரா?’ என்கிறாள். ‘அழைக்க வந்த எங்களுக்கு இது வேண்டியதுதான்’ என்று அவா்கள் அங்கலாய்க்கிறாா்கள்.

பாடல் சிறப்பு:

உள்ளும் புறத்துமாக மாறி மாறி நடக்கும் உரையாடல். வீண் பேச்சிலும் தற்பெருமையிலும் காலத்தைக் கழிக்காமல், வெளிச்ச சிந்தனைகளுக்கு வழிகோலும் பாடல். அகத்திலுள்ளதும் சூரியன் போன்று ஒளிா்வதுமான ‘பலப்பிரமதனி’ சக்தி எழுப்பப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com