எம்பாவாய்... மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம்

இன்று மாணிக்கவாசகரின் குரு பூசை. இன்று நாம் மாணிக்கவாசகர் பாடிய எம்பாவாய் பற்றி அறிய உள்ளோம். 
எம்பாவாய்... மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம்


இன்று மாணிக்கவாசகரின் குரு பூசை. இன்று நாம் மாணிக்கவாசகர் பாடிய எம்பாவாய் பற்றி அறிய உள்ளோம். 

திருவெம்பாவை,  900 ஆயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது. “தமிழ் மந்திரம்” என்ற பெயரில் அந்தக்காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும் சில திருவிழாக் காலத்திலும் சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர். ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் “ஏலோர் எம்பாவாய்!” என்ற சொற்றொடர் காணப்படும். அது மருவி இப்போது சயாமியரால் ” லோரி பாவாய்” என்று  பாடப்படுகிறது.

மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்தவர்.  இவரது இயற்பெயர் திருவாதவூரர். இவரது காலம் பற்றிய பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இவர் 63 நாயன்மார்களுள் ஒருவராக இல்லை. மேலும் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையில் இவர் இடம் பெறவில்லை. எனவே இவர் சுந்தரர் காலத்திற்கு பிற் பட்டவராக இருக்க வேண்டும்.  ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது பொதுவான முடிவு. அமாத்ய பிராமணர் வகுப்பில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அனைத்துக் கலைகள், மொழியில் புலமை  பெற்றுத் திகழ்ந்தார். அமாத்யர் என்பது அமைச்சர் என்பதன் வடமொழிச் சொல்லாகும். இந்தக் குலத்தில் பிறந்தவர்கள் அமைச்சர்களாக இருந்து வந்தார்கள். அதை ஒட்டி இவரும் அரிமர்த்தன பாண்டியனின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார். இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் பாண்டிய மன்னன் அரிகேசரி அல்லது அரிமர்த்தன பாண்டியன் தென்னவன் பிரமராயர் என்னும் உயரிய விருதை அளித்துப் பெருமை படுத்தினான்.   அரசனுக்கு அமைச்சராக இருந்தும் அவர் ஆன்மீக நாட்டம் உடையவராகவே இருந்தார்.

சிவனே குருவாக வந்து மாணிக்கவாசகரை தடுத்தாட் கொண்டார் என்பது கதை. மார்கழி மாதத்தில் அவர் சிவனைக்  குறித்துத்  தீந்தமிழில் பாடிய  திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் ஓதப்படுகின்றன.

திருவண்ணாமலையில் இவர் பாடிய பாடல்களே திருவெம்பாவை எனப்படுகின்றன. இப்பாடல்களில் தன்னை ஒரு பெண்ணாகப் பாவனை செய்து  மார்கழி மாதக் காலையில் சிவனைக் குறித்துப் பாடுவது போல் பாடியுள்ளார்.

திருவெம்பாவை என்ற சொல்லில் திரு – தெய்வத் தன்மையைக் குறிக்கின்றது. எம் – என்பது உயிர்த் தன்மையை உணர்த்துகின்றது. பாவை – வழிபாட்டிற்கு உகந்த உருவம். ஆகவே திருவெம்பாவையின் திரண்ட பொருள், தெய்வத்தன்மை வாய்ந்த திருவருள் எங்களோடு இணைந்து இயங்குகின்றது. எங்களுக்குத் துணையாய் நிற்கின்றது. நாங்கள் செய்யும் நோன்பினைப் பாவைத் திருவுருவில் நின்று ஏற்கின்றது.  ஏற்றுப் பயனளிக்கிறது என்பதாகும். இப்பாடல்களில் பாவை சிறப்பிடம் பெற்றதால்  ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘எம் பாவாய்’ என்று அமைந்துள்ளது.  ஏலோரெம்பாவாய்  என்பதில் ஏலும் ஓரும் அசைகள்; பாவாய் – விளித்தல். பாவை நோன்பு நோற்கும் பெண்கள் ‘பாவாய்’ என அழைக்கப்படுகின்றனர்.

மாணிக்கவாசகரின் திருவெம்பாவை,ஆண்டாளின் திருப்பாவை இரண்டின் பாடுபொருள் ஒன்றுதான், பாடப்படும் கடவுள்தான் வேறு. மாணிக்கவாசகர் காண்பிக்கும் பெண்கள்,சிவனைப் போற்றி  நோன்பு நோற்கிறார்கள். கோதை நாச்சியாராகிய ஆண்டாளும் அவளது தோழியரும் கண்ணனை எண்ணிப் பாவை நோன்பு இருக்கிறார்கள். இந்த இரண்டும் ஏட்டிக்குப் போட்டியாய் பாடப்பட்டனவாக தோற்றம் அளிக்கின்றன.

இந்தப் பெண்கள் எல்லாரும் இளம் வயதினர். குறும்பும் வேடிக்கையுமாகப் பேசிச் சிரிக்கிற விளையாட்டுத் தோழிகள். ஆனால் கடவுள் பணி என்று வந்துவிட்டால், அனைவரும் தீவிரமாகி விடுகிறார்கள், ‘‘நாளைக்குக் காலையில சீக்கிரமா எழுந்து குளிச்சுக் கோயிலுக்குப் போகணும்’’ என்று திட்டமிடுகிறார்கள். பாவை நோன்புக்காகச் செய்ய வேண்டியவை என்னென்ன என்று பட்டியல் போட்டுத் தயாராகிறார்கள்.

மறுநாள் காலை, சில பெண்கள் சொன்னபடி சீக்கிரம் எழுந்துவிட்டார்கள். மற்றவர்கள் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அவர்களை எழுப்பிப் பாவை நோன்புக்காக அழைத்துச் செல்வதுதான் திருவெம்பாவையின் முதல் பகுதி.

மாணிக்கவாசகர் பல கோயில்களுக்குச் சென்று வழிபட்டு திருவண்ணாமலை வந்து  சேர்ந்தார். அது மார்கழி மாதம். திருவாதிரைக்கு இன்னும் பத்து நாட்கள்தான் எஞ்சி இருந்தன. அந்த ஊரில் இளமங்கையர்கள் விடியற் கருக்கலில்  எழுந்து வீட்டைப் பெருக்கித் தண்ணீர் தெளித்து கோலமிட்டுக் குளத்துக்கு நீராடச் செல்கிறார்கள். அந்த அழகான காட்சியை மாணிக்கவாசகர் பார்க்கிறார். உள்ளத்தில் உவகை பெருக்கெடுத்து ஓடியது. அந்த உவகை திரு எம்பாவைப் பாடல்களாக வடிவெடுத்தன.

முதல் எட்டுப் பாடல்களும் பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பி ஒன்றாகச் சேர்ந்து குளிக்கச் செல்லும் காட்சி வருணிக்கப்படுகிறது. அடுத்து எல்லோரும் கூடி இறையருளைப் பாடுவதாக அமைந்துள்ளது.


திருவெம்பாவை ஆன்மா தன்னைப் பீடித்துள்ள மாயையிலிருந்து விடுபட்டு இறைவனையடைய முயற்சிப்பதை விளக்குகின்றது என்பது தத்துவக் கருத்து ஆகும்.


முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோரம்பாவாய்.         

திருவெம்பாவையில் 20 பாடல்கள் உள்ளன. முதல் பாட்டு:

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய். 

ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அரும் பெருஞ்சோதியை யுடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும்,உறங்குகின்றனையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை என்ன வியப்பு!அடுத்த பாடல்

 பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
 பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
 நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
 சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
 ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக்
 கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
 தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
 ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்! 

சிறந்த அணிகளை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும் பொழுது எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப் பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய். இப்பொழுதுஅருமையாகிய படுக்கைக்கே, அன்பு வைத்தனையோ? பெண்களே! சீச்சி நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் சிலவாகுமோ! என்னோடு விளையாடிப் பழித்தற்குரிய சமயம்இதுதானோ? தேவர்களும் வழிபடுதற்கு நாணுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவன்; தில்லைச் சிற்றம்பலத்துஇறைவனுக்கு, அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்?

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் 
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச் 
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி 
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி 
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி 
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப் 
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன் 
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

காதில் அணிந்துள்ள குழைகள் ஆட, பொன் அணிகலன்கள் ஆட, பூமாலையணிந்த கூந்தல் ஆட, (அதைச் சுற்றும்) வண்டுக் கூட்டம் ஆட, குளிர்ந்த நீராடிச் திருச்சிற்றம்பலத்தைப் பாடி, வேதத்தின் பொருளைப்  பாடி, இறைவன் அந்த வேதத்தின் பொருள் ஆகும் திறத்தினைப் பாடி, அவனுடைய சோதி வடிவின் பெருமையைப் பாடி, கவன் அணிந்துள்ள கொன்றைக் கொத்தினைப் பாடி, எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்ற வல்லமையைப் பாடி, அவனே எல்லாவற்றிற்கும் இறுதியும் ஆவதைப் பாடி, (மும்மலம் ஆகிய) பிறவற்றை நீக்கி நம்மை வளர்த்தெடுத்த இறையருட் சத்தியின் பாதத் தத்துவத்தையும் பாடி நீராடுங்கள்!

மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, ஆண்டாளின் திருப்பாவை ஆகியவற்றைக் கண்டு அதைப் போன்றே சமணரான அவிரோதி நாதரால் இன்னொரு திருவெம்பாவை அதே சந்தத்தில் இயற்றப்பட்டிருக்கிறது.  இந்தத் திருவெம்பாவையில் அருகனைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.  இந்த நூலில்  சமணர்களது  வழி காட்டிகளாகிய தீர்த்தங்கரர்களைப்  போற்றிப் புகழப்பட்டுள்ளது.   இருபது  பாடல்கள் மயிலைநாதர் மேல் பாடப்பட்டுள்ளன. மயிலைநாதர் என்பது மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள நேமிநாதரைக் குறிக்கிறது.  சான்றாக ஒரு பாடலைக் பார்ப்போம்.

கரக் குழலாட மாணிக்கப் பூணாடச் 
சிகரக் குழலாட செறிவண் டிசைபாட 
முகரப் புனலாடி முக்குடையான் தாள்பாடி 
விகலக் கவிபாடி வேதப் பொருள்பாடிச் 
சகல சிநத் திறைவன் தன்னனைய தாள்பாடிப் 
புகலாம் பதியருகன் பொற்றா மரைபாடி 
இகலார்ந் தெனையளித்த வெற்கையான் தாள்பாடி 
பகரும் பிறப்பறவே பாடேலோ ரெம்பாவாய்   

திருவெம்பாவையின்  கடைசிப் பாடல் (20)  போற்றி, போற்றி என ஒவ்வொரு அடியும் தொடங்குகிறது.

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.

எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர்களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடிகளுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.
திருவெம்பாவை, திருப்பாவை,   அவிரோத நாதர் பாடிய திருவெம்பாவை ஆகிய பாடல்களில் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் தமிழின் இனிமையையும் ஓசைச் சிறப்பையும் பொருள் நயத்தையும் பரக்கக் காணலாம்.  இந்த பக்தி இலக்கியங்கள் தமிழ்மொழிக்குக் கிடைத்த கொடை ஆகும்.

முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோரம்பாவாய்.  
            

எனக்கூறித் தமக்கு வேண்டியவற்றைக் கேட்கின்றார்கள். பக்தி என்னும் தண்ணீரில் பாவங்கள் கழுவப்படுகிறதாம்.  இதை மாணிக்கவாசகர் இலக்கிய நயத்தோடு “ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்” என்று வருணிக்கிறார். கடவுள் நம்பிக்கை, பக்தி,  நோன்புகள் போன்ற மிகப்பெரிய சங்கதிகளை மிக இலகுவாக மக்களிடையே மாணிக்கவாசகர் புகுத்தி விடுகிறார். முக்கியமாக இளம் வயதினரிடம் பக்தியைக் காண்பது கடினம். அவர்களுடைய பல அய்யங்களுக்குப் பதில்சொல்ல முடியாது. ஆனால் மாணிவாசகரோ இளநெஞ்சங்களின் போக்கிலே சென்று மணிமணியான வாசகங்களின் மூலம் தன்கருத்தைச் சொல்லுகிறார்.

எல்லாம் தோன்றுதற்கு முன்னும் எல்லாம் அழிந்த பின்னும் இருப்பவன் இறைவன். இறைவா நீ! பழமைக்குப் பழமையானவன். பிற்காலத்தில் தோன்றிய புதுமையான பொருட்கள் அனைத்திற்கும் புதுமையானவன். எம்பெருமானே! நாங்கள் உன் தொண்டர்கள் உன்னுடைய அடியார்களின் பாதங்களை வணங்குகிறோம். அவர்களுடன் இணைந்து தொண்டு செய்வோம். அவர்களே எங்களின் கணவர்கள் ஆவார்கள். அவர்கள் விரும்பிக் கூறுவதை ஏற்று பணி செய்வோம். இப்படிப்பட்ட நல்ல நிலையை தந்தால் எங்களுக்கு குறை ஒன்றும் இருக்காது. அடியார்க்கும் அடியாளர்களைப் பணிவது இறைவனைப் பணிவதாகும். அந்தப் பணியே அனைத்திலும் சிறந்த இனிய பணியாகும் என்பது தத்துவக் கருத்து.

மாணிக்கவாசகருக்கு தமிழ் அன்னை கேட்டதெல்லாம் கொடுக்கிறார் போல் தெரிகிறது. அவருக்கு சொற்பஞ்சம் பொருட் பஞ்சம் இப்பதாகத் தெரியவில்லை.  ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ எனப் பாடிய மாணிக்கவாசகர் இறைவனை ஏகன், அனேகன், பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன், தேனார் அமுது, ஆரியன், போக்கும் வரவும் இல்லா புண்ணியன், சொல்லற்கரியான், பெம்மான், பெண் சுமந்த பாகத்தன், ஒப்பிலாமணி, அன்பினில் விளைந்த ஆரமுது, காண்பரிய பேரொளி, நுண்ணர்வு, ஆற்றின்ப வெள்ளமே, சுடரொளி, மெய்யன், விடைப் பாகன், அய்யன், பெருங்கருணைப் பேராறு, காவலன், தில்லைக் கூத்தன், தென் பாண்டி நாட்டான் போன்ற பல திருநாமங்களால் குறிக்கிறார்.

இறைவன் கருணைக் கடலா?  என்ற கேள்விக்கு மாணிக்கவாசகர் தித்திக்கும் சொற்றமிழில் விடை பகர்கிறார்.

கல்லைப் பிசைந்து கனி ஆக்கி, தன் கருணை வெள்ளத்து
அழுத்தி வினை கடிந்த வேதியன்!
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் 
பரிந்து  நீ பாவியேனுடைய 
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவ பெருமானே!

மேலும் ஒரு திருவெம்பா பாடலைப் பார்ப்போம்.

உன் கையில்  பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று  உரைப்போம் கேள்
எம் கொங்கை  நின் அன்பர்  அல்லார்  தோள்  சேரற்க
எம் கை உனக்கு அல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல் எம் கண் மற்ற ஒன்றும் காணற்க
இங்கு இப் பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்
எங்கு  எழில் என் ஞாயிறு  எமக்கு ஏலோர்  எம்பாவாய்!

திருஅண்ணாமலை கிரிவலத்தின் போது ஆதி அண்ணாமலை என்று சொல்லப்படும் அடி அண்ணாமலை என்ற இடத்தின் அருகில் நாம் இந்த மாணிக்கவாசகர் கோயிலை காணலாம். புதிது புதிதாக பல  முளைக்கின்றன. ஆனால் கிரிவலத்தின் போது யாரும் இங்கே செல்வதில்லை. சைவம் தழைக்க தொண்டாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பது நம் அவா. இரவின் மடியில் இந்த கோயிலை காண்போமா?

மாணிக்கவாசகர் குரு பூசை அன்று அவர் ப(பா)தமும் கண்டோம்.கேட்டோம். 

திருசிற்றம்பலம்.

..

ராகேஷ் TUT

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com