அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலின் பாலஸ்தாபன விழா வரும் 20ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
தொண்டை மண்டலத்தில் முப்புரம் எரிப்பதன் பொருட்டு சிவபெருமான் திருத்தேர் அச்சு இற்ற காரணத்தினால் இப்பகுதி அச்சிறுப்பாக்கம் என அழைக்கப்பட்டது. இங்குள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் இரு கருவறைகள் உள்ளன. வரலாற்றிலும், ஆன்மிக புராதனமிக்க கோயிலாக இது திகழ்கிறது.
இந்தக் கோயிலிலும், உமையாட்சீஸ்வர சுவாமி கோயிலிலும் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 12 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
எனவே இக்கோயில்களின் அனைத்து சன்னதிகளும் புதுப்பிக்கப்பட்டு, வரும் தை மாதம் மகா கும்பாபிஷேகத்தை நடத்த திருப்பணி உபயதாரர்களும், திருவிழா உபயதாரர்களும் திட்டமிட்டனர்.
அதற்கு முன்பாக, இந்தக் கோயில்களுக்கு ஏப்ரல் 20ஆம் தேதி காலை பாலஸ்தாபனம் செய்யப்படும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வரும் 18ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மங்கல இசையுடன் நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. அனுக்ஞ-விக்னேஸ்வர பூஜை, எஜமானர்கள் மகா கணபதி ஹோமம், கோபூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் தொடர்ந்து 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மறுநாள் 20ஆம் தேதி 4ஆவது கால அவப்ருத யாகம், மஹா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், மேளதாளங்களுடன் வேத விற்பன்னர்களின் மூலம் கலசங்கள் ஊர்வலமாகப் புறப்படுதல், அனைத்து சன்னதி சுவாமிகளுக்கு கலசாபிஷேகம், மஹா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை சோத்துப்பாக்கம் டி.ஆர்.ஏகாம்பர முதலியார், அச்சிறுப்பாக்கம் எம்.வேலாயதம் தம்பிரான், திருக்கோயில் நிர்வாகம், திருப்பணி உபயதாரர்கள் மற்றும் திருவிழா உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.