திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கியதையொட்டி திங்கள்கிழமை உலக நன்மைக்காக 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
நாகை மாவட்டம், திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது.
மருத்துவாசுரன் என்ற அசுரன் நந்திதேவரிடம் சண்டையிட்டபோது, ஏற்பட்ட குத்துக்காயங்கள் பட்ட நந்தி இக்கோயிலில் அமைந்துள்ளது சிறப்பு.
இக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கி ஒரு வாரத்துக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஏப்.14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு முதல் பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. அதன்தொடர்ச்சியாக திங்கள்கிழமை காலை 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, 1,008 சங்குகள் சிவ வடிவத்தில் அடிக்கி வைக்கப்பட்டு அதில், நறுமணப் பொருள்களால் ஆன புனிதநீர் நிரப்பப்பட்டது.
கோயில் அர்ச்சகர் ராஜப்பா சிவாச்சாரியார் தலைமையில் வேத விற்பன்னர்களைக் கொண்டு மகா யாகம் நடைபெற்றது.
தொடர்ந்து வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் கோயில் பிராகாரத்தில் ஊர்வலமாக மேளதாளம் முழங்க கொண்டு செல்லபட்டு, சுவேதாரண்யேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, 1,008 சங்குகளில் உள்ள புனித நீரை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, சுவேதாரண்யேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.