ஆவணி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை திரளான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. மாதந்தோறும் பௌர்ணமி நாள்களில் இங்குள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி, பௌர்ணமி நாள்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனர்.
ஆவணி மாத பௌர்ணமி: ஆவணி மாத பௌர்ணமியையொட்டி, சனிக்கிழமை மாலை 4 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.35 மணி வரை கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படியே, சனிக்கிழமை மாலை முதல் திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். மாலை 7 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.
மாலை 7.30 மணிக்கு கிரிவலப் பாதையின் சில இடங்களில் திடீர் மழை பெய்தது. இந்த மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். தொடர்ந்து, விடிய விடிய ஞாயிற்றுக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை ஸ்ரீஆதிஅருணாசலேஸ்வரர் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில்களில் பக்தர்கள் வழிபட்டனர். ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தற்காலிகப் பேருந்து நிலையங்கள்: பக்தர்கள் நலன் கருதி, நகரைச் சுற்றி 9 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த பேருந்து நிலையங்களில் இருந்து தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.