கடலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லை இந்த மங்களூர் பகுதி தான். விருத்தாசலத்தின் மேற்கில் 40 கிமி தூரத்தில் உள்ளது.
பெரும்பாலும் பொட்டல்காடுகளும், ஆங்காங்கே புஞ்சை நிலங்களையும் தவிர வேறு எதுவுமில்லாத இந்த ஊரில் மூன்று ஏக்கர் பரப்பில் ஐந்து நிலை கோபுரத்துடன் கூடிய பெரியதொரு சிவாலயம் கட்டியுள்ளனர் நாயக்கமன்னர்கள். முகப்பு மண்டபங்களில் நாயக்க மன்னர்களது சிலைகள் உள்ளன.
தூண்களில் பாயும் குதிரை அமர்ந்த ஈட்டி வீரன் சிலைகள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் மதில்சுவற்றினை ஒட்டிய சிற்றாலை மண்டபங்கள் உள்ளன. அதில் அறுபத்துமூவர் சிலைகள் உள்ளன. பின்புறம் சில லிங்க மூர்த்திகளும், நாகர்களும் உள்ளன. விநாயகர், முருகன் சிற்றாலயங்கள் உள்ளன. கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முகன், லிங்கோத்பவர், பிரமன் சிலைகள் உள்ளன. அம்பிகை இறைவனுக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கி உள்ளார், அவரின் கருவறை கோட்டத்தில் இச்சா, ஞான, கிரியா சக்திகளுக்குள்ளானவர்.
இறைவன் - காளத்தீஸ்வரர் இறைவி - ஞானாம்பிகை |
சந்திரனும் சூரியனும் உள்ளவரை இந்த நிபந்தங்கள் தொடரவேண்டும் எனக் கல்வெட்டில் சொன்னாலும் பேராசை எனும் அமாவாசையில் கிடந்து உழலும் மனிதர்கள் அத்தனையையும் ஆட்கொண்டதன் விளைவு இதுபோன்ற பெருங்கோயில்கள் பூசைக்குக் கூட வழியின்றி நிற்கின்றன.
பிரபலமான மற்றும் கட்டணம் வசூலிக்கும் கோயில்களுக்கு மட்டும் செல்லாமல், கிராம சிவாலங்கள் செல்வோம். கோயில்களுக்கு நேரடியாய் பொருள் தருவோம், பூசனை புரிவோர், கூட்டுபவர், மணியடிப்பவர், காவலர், விளக்கேற்றுபவர் எனப் பலர் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர்.
- கடம்பூர் விஜயன்