திருவாரூர் ஆழித்தேரோட்டத்தையொட்டி, அருள்மிகு தியாகராஜர், அஜபா நடனத்துடன் ஆழித்தேருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு எழுந்தருளினார்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப் பிரசித்தி பெற்றது. நிகழாண்டுக்கான திருவாரூர் ஆழித்தேரோட்டம் மே 27 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேரோட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த தியாகராஜர், ஆழித்தேருக்கு எழுந்தருளினார். முன்னதாக அஜபா நடனத்துடன், பாரி நாயனம், சுத்த மத்தளம், சிவ வாத்தியங்கள் முழங்க தேவாசிரிய மண்டபத்திலிருந்து புறப்பட்டார். பின்னர், பக்தர்கள் புடைசூழத் தேருக்கு எழுந்தருளினார். இவருடன், விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேசுவரர்ஆகியோரும் அவர்களுக்குரிய தேரில் எழுந்தருளினர்.
தேரோட்ட நாள் வரை தியாகராஜர், தேரில் இருந்தபடியே பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்யலாம். தேரோட்டத்துக்குப் பிறகு தியாகராஜர், ராஜநாராயண மண்டபத்துக்குச் செல்வார்.
சுவாமி தேருக்கு வந்ததையொட்டி, வெடிகுண்டு பிரிவு போலீஸார் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் நாள்களில் பாதுகாப்புப் பணிகள் அதிகரிக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.