திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை காலையில் யாகசாலை பூஜையுடன்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் விரதத்தைத் தொடங்கினர்.
 முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தல வரலாற்றை உணர்த்தும் கந்த சஷ்டி திருவிழா வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
 யாகசாலையில் பூஜைகளாகி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நண்பகலில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றதும் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின், சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தை வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று, சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 சூரசம்ஹாரம்: 5ஆம் திருநாளான நவ.12ஆம் தேதி வரை இதே நிகழ்ச்சிகளும், நவ. 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 6ஆம் திருநாளில் மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹாரமும் நடைபெறும்.
 கந்த சஷ்டி விழாவையொட்டி, வியாழக்கிழமை காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் தங்கள் விரதத்தைத் தொடங்கினர். இதனால் கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
 பக்தர்கள் வசதிக்காக கோயில் உள், வெளிப்பிரகாரங்கள் மற்றும் வளாகங்களில் பெரிய அளவிலான எல்.இ.டி. டி.வி.க்கள் வைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள், சுவாமி எழுந்தருளல், தங்கத் தேர் உலா, கலையரங்கில் நடைபெறும் பக்திச் சொற்பொழிவு ஆகியவை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. திருவிழாக் காலங்களில் காலை, மாலை வேளைகளில் கோயில் சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் பக்திச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
 முருகன் கோயில்களில்....:
 அறுபடை வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை கந்த சஷ்டி விழா பூஜைகளுடன் தொடங்கியது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com