உலக நீரிழிவு நோய் தினம்: சர்க்கரை நோயினால் அவதியா? திருச்செந்தூர் முருகனை வணங்குங்க!

நாளை உலக சர்க்கரை நோய் தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக நீரிழிவு நோய் தினம்: சர்க்கரை நோயினால் அவதியா? திருச்செந்தூர் முருகனை வணங்குங்க!

நாளை உலக சர்க்கரை நோய் தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நீரிழிவால் அதிகரித்து வரும் அபாயங்களைக் குறித்த அக்கறையோடு  உலக நீரிழிவு கூட்டமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து 1991-ஆம் ஆண்டு இந்நாளை உருவாக்கின. 160 நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் உலகின் மாபெரும் பிரசார இயக்கமான இது 2006-ஆம்  ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் அதிகாரப் பூர்வமான நாளாக இருந்து வருகிறது.

உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி உலகளவில் 450 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். 2.5 மில்லியன் இறப்புகள் சர்க்கரை நோயின் மூலம் ஏற்படுகிறது. உலக நீரிழிவு  நோய் விழிப்புணர்வு தினத்தில் சர்க்கரை நோய் தடுப்பு முறைகளை ஊக்குவித்து, சர்க்கரை நோயிக்கான சிகிச்சை முறைகளை வலுப்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தீவிர கண்காணித்தலின் மூலம்  சர்க்கரை நோயை தடுப்பதாகும். சர்க்கரை வியாதியில் உலகத்திலேயே முன்னோடியாக இருக்கக்கூடிய நாடு எது என்றால் அது இந்தியா. இந்தியாவிலேயே சர்க்கரை வியாதியில் முன்னோடியாக இருக்கக்  கூடிய மாநிலம் எது? என்றால் நம்புங்கள் அது நம் தமிழ்நாடு தான். 

நீரிழிவு நோய்

இன்று நீரிழிவு எனப்படுவது அன்றே சித்தர்களால் மது மேகம் என்ற பெயரில் சொல்லப்பட்டது. சர்க்கரை நோய் என்பது உண்மையில் ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. உடம்பிலிருந்து வரும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த இயற்கையாக கணையம் இன்சுலினை சுரக்கும். இந்தக் கணையம் சுரக்கும் இன்சுலினின் அளவில் உண்டாகும் குறைபாடே சர்க்கரை நோய் என்றழைக்கப்படுகிறது. சர்க்கரை  நோய் என்ற குறைபாடுதான் பல நோய்கள் உடம்பில் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 

நீரிழிவு ஒரு நீடித்த நோய். ஒருவரது உடலால் போதுமான கணைய நீரை (இன்சுலின்) உற்பத்தி செய்ய முடியாமை அல்லது அவரது உடல் கணைய நீருக்குத் தகுந்த முறையில் பதில்வினை ஆற்ற  முடியாமை ஆகிய காரணங்களால் இந்நோய் ஏற்படுகிறது. இந்நீர் கணையத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது சர்க்கரையை உடல் செல்கள் பயன்படுத்தி ஆற்றல் உண்டாக்கத் துணை புரிகிறது (மாவுச்  சத்துக்கள் சர்க்கரையாக உடைக்கப்படுகின்றன). மிகைச்சர்க்கரை இரத்தத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் பட்சத்தில் உடலுக்கும் பல்வேறு உறுப்பு மற்றும் திசுக்களுக்கும் சேதம் உண்டாக்குகிறது.  போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான்  ஹைப்பார்க்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.

அறிகுறிகள்

அடிக்கடி சிறுநீர் கழித்தல், எப்போதும் பசித்தல், தண்ணீர் அதிகமாகக் குடிப்பது, எப்போதும் களைப்பாக இருக்கும், ஆறாத புண், பிறப்புறுப்பில் நீர் வடியும் புண், உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல்,  காரணமில்லாமல் எடை குறைதல், மிகக் கூடுதல் எடை,கால் மரத்துப் போய் உறுத்துதல், மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே தகுந்த  மருத்துவரை அணுகி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

விளைவுகள்

நீரிழிவைத் துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும். கட்டுக்குள் இல்லாத நீரிழிவு, பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக, பார்வையை இழக்க நேரிடலாம் அல்லது பார்வை மங்கலாம். சிறுநீரகங்கள் சேதமடையலாம். இன்பெக்சன் அடிக்கடி ஏற்படலாம். காங்கரீன் எனும் புண், பாதத்தில் பிரச்னைகள் வரலாம். உடலுறவில் இயலாமை ஏற்படலாம். மூளைச்சேதமும், மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம். நீரிழிவு நோயைத் துவக்கத்திலேயேக் கட்டுப்படுத்திவிட்டால், பல சிக்கல்கள் தடுக்கப்பட்டு நீங்கள்  சாதாரண வாழ்க்கை வாழ உதவும்.

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?

நீரிழிவு நோயின் சிகிச்சையில் உணவுமுறை உடற்பயிற்சி நோயின் தீவிரத்தைத் தவறாமல் கண்காணித்தல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்தல் இன்சுலின் பயன்படுத்துதல் இந்த சிகிச்சைகளைத்  தகுந்த மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக்கொள்வதால் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு நீரிழிவு இருந்தால் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே  குணப்படுத்துவதாகச் சொல்லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து விடாமல் கவனமாயிருக்க வேண்டும்.

நீரிழிவு நோயிற்கான ஜோதிட காரணங்கள்

குரு மற்றும் சுக்கிரன் இருவருமே சர்க்கரை நோய்க்கான காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். இவ்விருவரும் தாமாக தனிப்பட்ட எந்த வியாதியையும் உருவாக்குவதில்லை, குறைபாட்டினைத்   தோற்றுவித்து பலவிதமான நோய்கள் உண்டாவதற்குக் காரணமாகிறார்கள். ஆனால் நீரிழிவு வியாதியைத் தருவது குருவும், சுக்கிரனும்தான் என்று கூறப்படுகிறதே அது எப்படி என்ற கேள்வி எழலாம்.  குரு மற்றும் சுக்கிரன் ஜாதகத்தில் வலுவிழக்கும்போது சர்க்கரை நோய் உண்டாகிறது. 

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இந்தச் சர்க்கரை நோயின் தாக்கம் இருக்கிறது. அப்படியென்றால் இவர்கள் எல்லோரின் ஜாதகத்திலும் குருவும், சுக்கிரனும் வலுவிழந்திருப்பார்களா என்ற  கேள்வியும் எழுகிறது. குருவும், சுக்கிரனும் சாதகமாக அமர்ந்திருந்தால் சர்க்கரை நோய் இருந்தாலும் 80 வயதிற்கு மேற்பட்டும் அன்றாடம் மருந்துகளை உட்கொண்டு சர்க்கரையின் அளவினை  கட்டுக்குள் வைத்திருப்பர். குரு - சுக்கிரனின் வலு குன்றியிருந்தால் 50 வயதிற்குள்ளாகவே சர்க்கரை நோயின் தாக்கத்தால் பெருத்த பாதிப்பிற்கும் உள்ளாகிறார்கள் என்பதே இதற்கான பதில்.

நீரிழிவு நோயிக்கு முக்கிய காரணம் இன்சுலின் குறைபாடே என மேலே பார்த்தோம். அந்த இன்சுலினின் காரகர் குருபகவான் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. அதேபோல் நீரிழிவு நோயிக்கான காரக  பாவம் கால புருஷ ஜாதகத்தில் வயிற்றைக் குறிக்கும் ஆறாம் பாவம் மற்றும் ஜெனன ஜாதக ஆறாம் பாவம் ஆகும். எனவே இன்சுலின் காரகரான குரு பகவான் கன்னி ராசி மற்றும் அதன் அதிபதியை  எந்த விதத்தில் தொடர்பு கொண்டாலும் அவர்களுக்கு நீரிழிவு நோயின் பாதிப்பு இருக்கும். 

நீரிழிவு நோயை உருவாக்கும் கிரக நிலைகள்

1.குரு ஆட்சி உச்சம் பெற்றவர்களுக்கும் நீசமடைந்தவர்களுக்கும் வக்ரம் பெற்றவர்களுக்கும் சர்க்கரைநோய் வந்து விடுகிறது. குரு ஆட்சி உச்சம் பெற்றவர்கள் சர்க்கரை நோய் வந்தாலும் எதிர்ப்பு சக்தி  பெற்று மருந்து மாத்திரைகளுடன் பிரச்னையின்றி வாழ்ந்திடுவர். ஆனால் குரு நீசமும் வக்ரமடைந்தவர்களுக்கு மருந்துகளும் பலனின்றி அவதியுறுவர்.

2. கல்லீரலுக்கு காரகமான குரு கால புருஷனுக்கு ஆறாம் வீடு எனப்படும் கன்னி ராசியில் குருவும் சுக்கிரனும் ஆறு/எட்டு/பன்னிரண்டு தொடர்பு பெற்று அசுபத்தன்மை பெற்று நிற்பது மற்றும் சுக்கிரன்  நீசமடைவது, கன்னியில் நீசமடைந்த சுக்கிரன் செரிமான கோளாரை ஏற்படுத்தி நீரிழிவு நோயை ஏற்படுத்திவிடுகிறது.

3. துலாம், மீனம் மற்றம் தனுசு, ரிஷபம் லக்னமாகவோ ராசியாகவோ பெற்றவர்களுக்கு குருவும் சுக்கிரனும் சஷ்டாஸ்டகமாக நின்று சர்க்கரை நோய் ஏற்பட்டுவிடுகிறது.

4. எந்த லக்னமானாலும் அதன் ஆறாம் வீட்டில் குருவும் சுக்கிரனும் ஆறு/எட்டு/பன்னிரண்டு அதிபதிகளாகி அசுபத்தன்மை பெற்று நிற்பது.

5. கால புருஷனுக்கு பன்னிரண்டாம் வீடாகிய மீனத்தில் குரு ஆட்சி பெறுவது அல்லது சுக்கிரன் உச்சமடைவது.

6. ஜெனன ஜாதகத்கதிலோ அல்லது கோச்சாரத்திலோ கன்னி ராசியில் சனி நிற்பது இறுதிநிலை அல்லது தீவிரமான உச்ச நிலை சர்க்கரை நோயைத் தெரிவிக்கிறது. கன்னியில் வாயு கிரகமான சனி  செரிமான கோளாறு, வாயுத்தொல்லை, கல்லீரல் பிரச்னைகள் மற்றும் என்சைம் பிரச்னைகளையும் ஏற்படுத்தி தீவிர சர்க்கரை நோயை ஏற்படுத்திவிடுகிறது.

7. குரு ராகு சாரம் பெற்று நிற்பது, ராகுவுடன் இணைந்து நிற்பது சுக்கிரன் சனி சாரம் பெறுவது மற்றும் சுக்கிரன் சனியுடன் இணைந்து நிற்பது குருவும் சுக்கிரனும் பாதகாதிபதி தொடர்பு பெறுவது  அல்லது பாதகாதிகளாகவே நிற்பது பிறப்பிலிருந்தே சர்க்கரை நோய் ஏற்பட்டு விடுகிறது.

8. சுக்கிரன் மற்றும் சந்திரன் சேர்க்கை எந்த விதத்தில் ஏற்பட்டாலும் அதிக கார்போஹட்ரேட் உணவுகளினால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

9. வைட்டமின் B6 (காரக கிரகம் குரு) குறைபாடுள்ளவர்களுக்கு அமினோ அமிலமான ட்ரிப்டோபான், ஸாந்துரனிக் அமிலமாக மாற்றமடைந்து குறைந்த கால இடைவெளியில் கணையம் சிதிலமடைந்து  ரத்தத்தில் சர்க்கரை நோயை ஏற்படுத்துகிறது. அதனால் அதிகளவு குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து செல்லிலிருந்து அதிகளவு நீரினை வெளியேற்றுவதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது நாவறட்சி போன்றவை  ஏற்படுகிறது. மேலும் வைட்டமின் B6 என்பது பெண்கள் கருத்தரிக்க மிகவும் அவசியமானது. எனவே பெண்களுக்கான வைட்டமின் என செல்லமாக அழைக்கப்படுகிறது. புத்திர காரகனாகிய குரு இதற்கும்  காரகமாவது எவ்வளவு பொருத்தமானதன்றோ!

10. தாதுக்களில் முக்கியமானதான மாங்கனிசு (காரக கிரகம் குரு) மற்றும் க்ரோமியம் (காரக கிரகம் குரு) குறைபாடும் கணைய செயல்பாடு மற்றும் மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றத்தில்  பிரச்னையை ஏற்படுத்துகிறது.
 
மேற்கத்திய ஜோதிட கிரக நிலைகள்

1. உப கிரகமான புளுட்டோ கன்னியில் நிற்பது மற்றும் அசுப தொடர்பு பெறுவது கணைய செயல்பாடுகளில் பிரச்னையை ஏற்படுத்தி இன்சுலின் சுரப்பதில் குறைபாட்டினை தந்து தீவிர சர்க்கரைநோயை  ஏற்படுத்திவிடுகிறது மேற்கத்திய ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இந்த நோயின் தீவிரத்தை குளுக்கோஸ் ஏற்பு பரிசோதனை (Glucose Tolerance Test)மூலம் அறிய முடியும்.

2. உப கிரகமான யுரேனஸ் கன்னியில் நிற்பது அல்லது அசுப தொடர்புபெறுவது உணர்ச்சி வசப்படுவது, மன அழுத்தம், மன உளைச்சல், அடிக்கடி கோபப்படுவது போன்ற காரணங்களால் திடீரென  சர்க்கரை நோயை ஏற்படுத்தி செரிமான கோளாறுகள் மற்றும் கணைய பிரச்னைகளை ஏற்படுத்தி சர்க்கரை நோய்க்கான தீவிர சிகிச்சை மேற்கொள்ளும் நிலையை ஏற்படுத்திவிடுகிறது. தவறும்  பட்சத்தில் கனைய செயலிழப்பு மற்றும் உயிரிழக்கும் நிலையையும் ஏற்படுத்துகிறது.

நீரிழிவு நோய்க்கான ஜோதிட பரிகாரங்கள்

குரு பரிகாரஸ்தலங்களான திரு ஆலங்குடி, தென்குடி திட்டை, திருச்செந்தூர் போன்ற ஸ்தலங்களுக்கும் சென்னையில் உள்ளவர்கள் திருவலிதாயம் அம்பத்தூர் பாடியில் உள்ள குரு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவது வியாழக்கிழமை மகான்கள் தரிசனம் மற்றும் விரதமிருப்பது ஆகியவை சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கும். 

முக்கியமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து இந்நோயினால் அவதியுறுபவர்கள் சர்க்கரை நோயின் காரகரான குரு மற்றும் ரத்தத்தின் அதிபதியான செவ்வாய் இருவருக்கும் ஒரே ஸ்தலமாக விளங்கும் திருச்செந்தூர் முருகனை சஷ்டி விரதம் இருந்து வழிபட சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். நோய் ஏற்பட்டவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி விரதமிருக்கக் கூடாது.

சுக்கிரன் பலம் பெற்றிருந்தாலும், பலம் குறைந்திருந்தாலும் சுக்கிரனுக்குரிய வழிபாடுகள், பரிகாரங்கள் செய்வதன் மூலம் தோஷம் குறையும். விருத்தியடையும். பெண்கள் சுக்கிர வாரம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது நல்லது. அத்துடன் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா  ஸ்தோத்திரம், ஸ்ரீலட்சுமி காயத்திரி மந்திரம் சொல்லலாம். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். சுக்கிர சேத்திரமான கஞ்சனூர், கும்பகோணம் அருகில் உள்ளது. அங்குச் சென்று  தேவியருடன் அருள்பாலிக்கும் சுக்கிரனை வழிபட்டால் எல்லா வகையான திருமண தோஷங்களும் நீங்கும்.

சென்னை மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயில் அருகில் உள்ள வெள்ளீஸ்வரர் மற்றும் மயிலாப்பூரில் உள்ள வெள்ளீச்சரம் என்ற வெள்ளளீஸ்வரர் ஸ்தலம் சுக்கிரனுக்கு உரியது. இங்குள்ள சுக்கிரேஸ்வரர் சுக்கிரனின் அம்சமாக உள்ளார். இவரை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை காலத்தில் தரிசித்து வர சர்க்கரை நோயினால் ஏற்படும் கண்கள் சம்பந்தமான கோளாறுகள் மற்றும் சர்க்கரை  நோய் நிவர்த்தியாகும். பரிகார ஸ்தலங்கள், விசேஷ கோயில்களுக்குச் சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டருகே இருக்கும் நவக்கிரக சன்னதியில் சுக்கிர பகவானை வழிபடலாம். 

ரத்தத்தைக் குறிக்கும் காரக கிரகமான செவ்வாய் ஸ்தலமான வைதீஸ்வரன் கோயிலுக்கு செவ்வாய் கிழமையில் சென்று தரிசனம் செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து நோய் பாதிப்பை குறைக்கும். இத்துடன் திருவாரூர் மாவட்டம் கோயில்வெண்ணியில் உள்ள அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது சர்க்கரை அளவைக் குறைத்து நோய் பாதிப்பை குறைக்கும். தீவிர சர்க்கரை நோயால் அவதியுறுபவர்கள் சனைச்சர பகவானுக்கு கரும்புச்சாற்றினால் அபிஷேகம் செய்துவர சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.

மருத்துவ முறைகள்

1. ஆயுர்வேதத்தில், நீரிழிவு மதுமேகம் என அறியப்படுகிறது. ஆயுர்வேத, நீரிழிவு நோய் ஒரு வளர்சிதை மாற்ற கபம் வகை சார்ந்த நோயாகக் கருதப்படுகிறது இதில் அக்னி (செரிமான தீ) குறைபாடு காரணமாக அஜீரன கோளாறுகளால் கணையத்தில் சர்க்கரை அதிகரித்து நோயை ஏற்படுத்துகிறது. வயிற்றிற்கும் செரிமான தீக்கும் காரக கிரகம் நெருப்பு ராசி அதிபதியுமான குருபகவானே ஆவார்.

2. பலருடன் அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல் / மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவு வகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும்  போது மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுக்கிரன் நீசம் அடைவது, சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்து நிற்பது போன்றவை பலருடன் உடலுறவு கொள்ளும் நிலையை  ஏற்படுத்திவிடுகிறது. 

3. மதுமேகாதி சூர்னம், வஸந்த குசுமாகர ரஸம், அஸ்வ கந்தா சூர்ணம் (அமுக்கார சூர்னம்) போன்ற மருந்துகள் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது நோயைக் கட்டுக்குள் வைக்கும்.

4. சிறுகுறிஞ்சான் தென்னிந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையான இன்சுலின் தேவையற்ற நீரிழிவு நோயிற்கு அதிகமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது.

அமிர்த சர்க்கரை எனும் சீந்தில் சர்க்கரை (டினோஸ்போரா கார்டிபோலியா)

சீந்தில் கொடி குருவின் தன்மையும் சுக்கிரனின் தன்மையும் நிறைந்த கொடிவகை தாவரமாகும். இதனை வஞ்சிக்கொடி என்றும் அழைப்பார்கள். சீந்தில் கொடிக்கு, வஞ்சி மரம், ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று பல பெயர்கள் உண்டு. பிறந்த குழந்தைக்கு காரகர் குருவாகும். பிறந்த குழந்தையின் வயிற்றில் தாயையும் குழந்தையையும் இணைக்கும்  தொப்புள் கொடியின் காரகர் சுக்கிரனாகும். அந்த தொப்புள்கொடி சுற்றி குழந்தை பிறந்தால் தோஷம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு சீந்தில் கொடியைக் கொண்டு  பரிகார ஹோமங்கள் செய்வது வழக்கம். சித்த வைத்தியத்தில் வஞ்சிக் கொடி முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

முதிர்ந்த கொடியை நறுக்கி இடித்து நல்ல நீரில் கரைத்து வடிகட்டி அசையாது சில மணி நேரம் வைத்திருந்து நீரை வடித்துப் பார்க்க அடியில் வெண்ணிறமான மாவு படிந்திருக்கும். மீண்டும் நீர் விட்டுக் கரைத்து தெளிய வைத்து இறுத்தி எடுத்து உலர்த்தி வைக்கப் பளிச்சிடும் வெண்ணிறப் பொடியாயிருக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும். இது ஓர் கற்ப மருந்தாகக் கருதப்படுகிறது. உணவுக்  கட்டுப்பாட்டுடன் நீண்ட நாள் சாப்பிட பல பிணிகளும் நீங்கும் என்பதாம்.

வஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என்று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார். இன்றைய விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சியிலும்  மேற்கண்ட மருத்துவ ஆற்றல் உண்மையென்று உணரப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோயால் ஏற்படும் அடைப்பின் காரணமாக உருவாகும் மஞ்சள் காமாலை, காச நோய்களில் இருந்து நோயாளிகளைப்  பாதுகாக்கக்கூடிய மருந்து சீந்தில் கொடியில் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: எந்த மருத்துவ முறையானாலும் சுய மருத்துவம் செய்யாமல் சம்மந்தப்பட்ட மருத்துவர் ஆலோசனையுடன் மருந்து உட்கொள்வது சிறந்தது. 

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com