திருவண்ணாமலை தீபத் திருவிழா: பஞ்ச ரதங்களின் தேரோட்டம் கோலாகலத் தொடக்கம்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, இன்று காலை முதல் இரவு வரை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை தீபத் திருவிழா: பஞ்ச ரதங்களின் தேரோட்டம் கோலாகலத் தொடக்கம்

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, இன்று காலை முதல் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தக் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 14-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா நவம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

பஞ்ச ரதங்களின் தேரோட்டம்

தீபத் திருவிழாவின் 7-ம் நாளான இன்று காலை (நவம்பர் 20), பஞ்ச ரதங்களின் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டன.

ஸ்ரீவிநாயகர் தேரோட்டம்

இன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் ஸ்ரீவிநாயகர் தேரோட்டம் தொடங்கியது. 

தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெருக்களில் வலம் வந்த ஸ்ரீவிநாயகர் தேர், காலை 10.45 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்து.

ஸ்ரீமுருகர் தேரோட்டம்

2-வதாக காலை 11 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான் தேர் புறப்பட்டது. மாட வீதிகளில் வலம் வந்த முருகர் தேர், பகல் 12.30 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது.

ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேரோட்டம்

3-வதாக பெரிய தேர் எனப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேர் பிற்பகல் சுமார் 1 மணிக்குப் புறப்படுகிறது. 4-வதாக பெண்கள் மட்டுமே இழுக்கும் ஸ்ரீபராசக்தியம்மன் தேரும், 5-வதாக சிறுவர்கள் மட்டுமே இழுக்கும் ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேரும் புறப்படுகின்றன. கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்படும் பஞ்ச ரதங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மாட வீதிகளை வலம் வருகின்றன.

தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் வலம் வரும் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் இரவு 11.30 மணிக்கு நிறைவடைகிறது. 

இதற்கிடையே, தேரோட்டத்தைக் காண தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுர தெரு, பெரிய தெருக்களில் வழக்கத்தைவிட அதிகமான  பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் மற்றும் உபயதாரர்கள், கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com