திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நாளை மலைப்பகுதியைச் சுற்றி ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கிரிவலம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று அதிகாலை பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு தங்க ரிஷப வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகர், ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
அடுத்த முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தெப்பல் உத்ஸவம் நடைபெறுகிறது. இன்று சனிக்கிழமை(நவம்பர் 24) இரவு 9 மணிக்கு திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உத்ஸவமும், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 25) இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உத்ஸவமும், திங்கள்கிழமை (நவம்பர் 26) இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உத்ஸவமும் நடைபெறும்.
நாளை அதிகாலை ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கிரிவலம் நடைபெறுகிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். செவ்வாய்க்கிழமை (நவம்பர் 27) இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெறுகிறது. இத்துடன் இந்தக் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.