2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைத் தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் அவர்கள் தனுசு ராசிக்குத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)
ஜென்ம ராசியில் சனி. பொதுவாக ஜென்ம லக்கினத்திலோ அல்லது ஜென்ம ராசியிலோ சனி இருப்பது நல்லது அல்ல. முன்னேற்றம் தடைப்படும். மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். ஜென்ம ராசியில் சனி இருப்பதால் 7-ம் இடத்திற்கு சனியின் பார்வை கிடைக்கிறது. ஆகத் திருமணம் தாமதமாகும். ஏதாவது நல்ல செய்தி எதிர்பார்த்திருந்தால் அது கிடைக்கத் தாமதமாகும். அதேபோல் வேலை தேடும் படலத்தில் இருப்போருக்கு வேலை கிடைக்கத் தாமதம் ஆகும். அதிகப்படியாக வேலைக்காக அலைய வேண்டியது இருக்கும்.
இரண்டாம் இடம் என்பது வாக்கு ஸ்தானம் ஆகும். இதில் கேதுவானவர் மாசி மாதம் முடிய அமர்ந்து இருக்கிறார். 2-ல் கேது இருப்பது மற்றவர்களைக் காயப்படுத்திப் பேசச் சொல்லும். அதாவது “யாகாவாராயினும் நா காக்க” என்னும் குறள் இவர்களுக்குப் பொருந்தும் ஆகவே சற்று நிதானித்துப் பேசுவது இவர்களுக்கு நல்லது.
இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கடி வெளியூர்ப்பயணம் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இந்த ஆண்டில் அதை அறியப்படும் படியான நிகழ்வுகள் நடக்கும். 4-ம் இடமான ஸ்த்ர சொத்துக்கள் வாங்கும் இடத்திற்கு குருவின் பார்வை. அதுவும் தன் சொந்த வீட்டைப் பார்க்கிறார். ஆகவே சொந்த வீடு வாங்க விழையும் இந்த ராசிக்காரர்களுக்கு இது ஒரு அனுகூலமான காலம் ஆகும். சிலர் தங்கள் குழந்தையின் நலனுக்காக இன்சூரன்ஸ், சேமிப்புக் கணக்குப் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள்.
வியாபாரத்தில் இருப்போருக்கு
பொதுவாக இந்தப்பெயர்ச்சியின் மூலம் வியாபாரம் சாதாரணமாகத்தான் இருக்கும். அதிக அளவில் முன்னேற்றம் காண்பது அரிது. தனிப்பட்ட ஜாதகத்தில் வியாபாரத்தில் உயர்வு இருந்தாலொழிய உயர்வு காண்பது முடியாது.
உத்தியோகஸ்தர்களுக்கு
ஜீவனஸ்தானத்திற்கு சனியின் பார்வை இருப்பதால் பதவி உயர்வு பெறுவது சற்றுக் கடினமான செயல். அதேபோல் வேலைதேடும் படலத்தில் இருப்போருக்கும் கடின உழப்பிற்குப் பிறகே வேலைக் கிடைக்கும்.
பரிகாரம்: சிவன் கோயிலுக்குச் சென்று நல்லெண்ணை தீபம் ஏற்றலாம். சனிக்கிழமைகளில் நவக்கிரகம் சுற்றி வரவது நல்லது.
*****
மகர ராசிக்காரர்களே, உங்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைப் படிக்க நாளை வரை காத்திருங்கள்!