திருப்பதிக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு: நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!
திருப்பதியில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க திருமலை தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
திருப்பதியில் கடந்த 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாள் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு நகராட்சி தடை விதித்தது. இதைதொடர்ந்து திருப்பதி கோயிலிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
திருமலையில் உள்ள உணவகங்களில் பயன்படுத்தப்படும் தேநீர், காபி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக்கினால் ஆன கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் உடைமைகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் நாளை முதல் திருமலை முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? எனச் சோதனை நடத்துகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தப்படும். அதனை மீறி கொண்டுவந்தால் ரூ. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது லட்டு கவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டு கவர்களை மட்டும் பயன்படுத்த தேவஸ்தானம் நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளது.