ஸ்ரீ ராமபிரான் இலங்கை செல்வதற்காக வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர். எல்லா வானரங்களும் கற்களைத் தூக்கி கடலுக்குள் போட்டன. ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின் மீது சரியாக அமர்ந்தது. ஆஞ்சநேயர் அந்தப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார், மனதிற்குள் ராமநாமம் ஜெபித்தபடி...
ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார் அவர் மனதிலும் ஆசை ஏற்பட்டது. நாமும் இந்த வானரங்களுடன் இணைந்து கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன எனக் கருதியபடியே ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார். அந்தக்கல் சரியாக மற்ற கற்களின் மீது அமரவில்லை. அவை தண்ணீரில் அடித்துச் சென்று விட்டது. ராமபிரானுக்கு வருத்தம். இந்த வானரங்கள் போடும் கற்கள் மட்டும் மற்றொரு கல்லின் மீது அமர்ந்து விட்டதே இதற்கு என்ன காரணமாக இருக்கும் என வருத்தப்பட்டார்.
ஆஞ்சநேயர் ராமர் அருகில் வந்தார் அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். ஆஞ்சநேயர் நான் செய்ததை நீ பார்த்து விட்டாயா எனக்கு ஒரு கல்லை போடக்கூடத் தெரியவில்லை என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கிறது என்றார்.
அதற்கு ஆஞ்சநேயர் பிரபு எல்லா வானரங்களும் உங்கள் தாரக மந்திரமான ராம் ராம் என்ற உங்கள் நாமத்தைச் சொல்லிக் கொண்டே கற்களைத் தூக்கிப் போட்டன அவை சரியாக அமர்ந்தது. நீர் ராமனாகவே இருந்தாலும் ராம நாமம் சொல்லி போட்டிருந்தால் அது சரியாக கற்களில் போய் அமர்ந்திருக்கும் என்றாராம்.
ராமநாமம் அவ்வளவு சக்தி வாய்ந்தது. மிகவும் அற்புதமானது ஸ்ரீ ராமரின் பெயரை இடைவிடாது உச்சரிப்பதன் மூலம் எல்லா உயிர்களிடத்தும் ராமனைக் காணலாம் எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் விடுதலைப் பெறலாம். பாவங்களிலிருந்து விடுபடலாம். இவ்வளவு சக்தி வாய்ந்த ராம நாமத்தைப் பூஜை அறையிலோ, கோயிலுக்கோ செல்லும் போது மட்டும் தான் கூற வேண்டும் என்றில்லை. தெருவில் நடந்து போகும் போதும், அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், வீட்டில் சமையல் செய்யும் போதும் சொல்லலாம்….! ராம் என்ற சொல் புனிதமான ஓம் என்னும் மந்திரத்திற்குச் சமமானது.
ஸ்ரீ ராம ஜெயம்! ஸ்ரீ ராம ஜெயம்! ஸ்ரீ ராம ஜெயம்!