காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை அருளாசி பெற்றார்.
காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சியொன்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். இதையடுத்து, காஞ்சி சங்கர மடத்துக்கு நண்பகல் 1.45 மணிக்கு வருகை புரிந்தார். அப்போது, அவரை சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேசய்யர், ஸ்ரீகார்யம் விஸ்வநாதன் ஆகியோர் ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து, விஜயேந்திரர் பூஜை செய்துகொண்டிருந்த சந்திரமௌலீஸ்வரர் சந்நிதிக்கு பிரணாப் முகர்ஜியை அழைத்துச் சென்றார்.
அங்கு, சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து பிரணாப் முகர்ஜி அருளாசி பெற்றார். பின்பு, பிரணாப் முகர்ஜியை பீடாதிபதி விஜயேந்திரர் மகாபெரியவர், ஜயேந்திரர் பிரவேசம் செய்துள்ள மகா சுவாமிகளின் பிருந்தாவனத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு, இருவரும் ஜயேந்திரர் அதிஷ்டானத்தைச் சுற்றி வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், மடத்தில் வழக்கமாக நடைபெறும் பாதபூஜையில் பிரணாப் கலந்துகொண்டார். அப்போது, காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ஸ்ரீகார்யம் விஸ்வநாத சாஸ்திரி, அம்மனின் பிரசாதத்தை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து, ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அறையில் வைக்கப்பட்டிருக்கும் அவரது மெழுகுச் சிலைக்கு மாலை அணிவித்து பிரணாப் மரியாதை செலுத்தினார்.
பின்பு, விஜயேந்திரருடன் சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக உரையாடினார். அதையடுத்து, சுமார் 3.30 மணிக்கு விஜயேந்திரரிடம் ஆசி பெற்று, சங்கர மடத்திலிருந்து பிரணாப் முகர்ஜி, சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.