இயற்கைப் பேரழிகளால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க காஞ்சிபுரத்தில் மகா சாந்தி யாகம் நடத்தப்பட்டது.
பஞ்சபூத ஸ்தலங்களில் மண் (பிருத்வி) தத்துவமாக உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் வளாகத்தில் உலக நன்மை, இயற்கைப் பேரழிவிலிருந்து வரும் தாக்கத்தைக் குறைத்தல் ஆகியவற்றை வேண்டி பஞ்சபூத மஹா சாந்தி யாகம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. முன்னதாக, சுனாமி, நிலநடுக்கம், எரிமலை வெப்பம், சூறாவளி, புயல், வெள்ளம் ஆகியவற்றிலிருந்து தப்பி, மனிதர்கள் அமைதியாக வாழ வேண்டி, அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை, ஆகாய ஸ்தலமான சிதம்பரம், நீர் ஸ்தலமான திருவானைக்கா, வாயு ஸ்தலமான காளஹஸ்தி ஆகிய 4 பஞ்சபூத ஸ்தலங்களில் மகா சாந்தி யாகம் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மண் ஸ்தலமான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 5 மணி முதல் தொடர்ந்து 5 மணி நேரம் யாகம் நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் இந்த யாகத்தை நடத்தினர். அப்போது, பூரண கும்பம், யாகசாலைப் பிரவேசம், பஞ்சாட்சர வேள்வி, மாணவர்களின் நாட்டியாஞ்சலி, கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் யாக ஏற்பாடுகள் நடைபெற்றன. இதில், பஞ்சபூத மஹா சாந்தியாக குழுவினர், யாகத்தில் பஞ்சபூத மஹா சாந்தி யாகக் குழுவின் தலைவர் ஐ.ஆர். பெருமாள் சுவாமிகள், பல்வேறு மடங்கள், ஆதினங்களின் பிரதிநிதிகள், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.