ஆதிவராக சேத்திரமாகக் கருதப்படும் திருமலையில் புதன்கிழமை வராக ஜயந்தி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
திருமலையில் ஆண்டுதோறும் தேவஸ்தானம் வராக ஜயந்தி உற்சவத்தை விமரிசையாக நடத்தி வருகிறது. வராக சேத்திரமாக கருதப்படும் திருமலையில், ஏழுமலையானுக்கு வராக சுவாமி தங்க இடம் அளித்ததால், முதல் பூஜை, முதல் நைவேத்தியம் திருக்குளக்கரையில் எழுந்தருளியுள்ள வராக சுவாமிக்கு அளிக்கப்படுகிறது.
பக்தர்களும் ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் முன் வராக சுவாமியை தரிசித்து, அதன்பின் ஏழுமலையானைத் தரிசிப்பது விசேஷம். அதன்படி, புதன்கிழமை வராக ஜயந்தியையொட்டி, திருமலையில் வராக சுவாமி சந்நிதியில் கலசஸ்தாபனம், கலச பூஜை, புண்ணியாசவனம் உள்ளிட்டவற்றை அர்ச்சகர்கள் நடத்தினர்.
காலை 9 முதல் 10 மணி வரை பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல வகையான அபிஷேகப் பொருள்களால் அவருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.