திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் சிறந்த முறையில் நடக்க அங்குரார்பணத்தை அர்ச்சகர்கள் புதன்கிழமை நடத்தினர்.
திருமலையில் செப்டம்பர் 13-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவம் எவ்வித தடங்கலும் இன்றி, சிறப்புடன் நடைபெற அதன் முந்தைய நாள் திருமலையில் அங்குரார்பணம் எனும் முளைவிடுதல் உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, புதன்கிழமை மாலை ஏழுமலையான் கோயிலிலிருந்து சேனாதிபதி விஷ்வக்சேனர் தலைமையில், அர்ச்சகர்கள் குழு மேள தாளத்துடன் அருகில் உள்ள நந்தவனத்துக்குச் சென்று புற்றுமண்ணை எடுத்து வந்தனர்.
அந்த புற்று மண்ணை ஏழுமலையான் கோயிலில் உள்ள மண்டபத்தில் கொட்டினர். பின்னர், அதற்கு பூஜைகள் செய்து பூதேவியின் உருவத்தை அர்ச்சகர்கள் வரைந்தனர். அதில் பூதேவியை ஆவாஹனம் செய்து, அவர் வயிற்றுப்பகுதியிலிருந்து மண் எடுத்து பெரிய பாலிகைகளில் இட்டனர்.
அதன்பின், அதில் ஊறவைத்த நெல், கோதுமை, கேழ்வரகு, கருப்பு உளுந்து, கொள்ளு, கருப்பு கொண்டை கடலை, வெள்ளை கொண்டை கடலை, மொச்சை, பச்சைப் பயிறு, காராமணி உள்ளிட்ட நவதானியங்களை அர்ச்சகர்கள் அதில் விதைத்து, நவதானியங்களை ஊற வைத்த நீரை தெளித்தனர்.
முளைக்க விட்ட நவதானியங்கள் நன்றாக வளர்ந்தால் பிரம்மோற்சவமும் சிறப்பாக நடைபெறும் என்பது நம்பிக்கை. இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.