சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவையொட்டி புதன்கிழமை மாலையில் தேரோட்டம் நடைபெற்றது.
செப்.4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் காலை மூஷிக வாகனத்தில் வெள்ளி கேடகத்தில் திருவீதி உலாவும், இரவில் பல வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. ஒன்பதாம் திருவிழாவான புதன்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமி காலை 9 மணிக்குத் தேரில் எழுந்தருளினார். மாலை 5 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது.
கற்பக விநாயகர் ஒரு தேரிலும், சண்டிகேஸ்வரர் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். சண்டிகேஸ்வரர் தேரினை பெண்கள் மட்டுமே இழுத்தனர். மூலவர் கற்பக விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை 6 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் ஆசியுரை நிகழ்ச்சியும் தொடர்ந்து திருச்சி கே.கல்யாணராமனின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றன.இரவு 8.30 மணிக்கு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி நாளான வியாழக்கிழமை காலை கோயில் எதிரே உள்ள குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
மதியம் 12 மணியளவில் மூலவரான கற்பக விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்படும். இரவு 11 மணியளவில் ஐம்பெரும் மூர்த்திகள் திருவீதி உலாவுடன் சதுர்த்தி விழா நிறைவுபெறும்.