வரும் 17ஆம் தேதி கருட சேவை நடைபெற உள்ளதால் அன்று நேர ஒதுக்கீட்டு தரிசன டோக்கன்களை வழங்குவதை தேவஸ்தானம் ரத்துசெய்துள்ளது.
திருமலையில் கடந்த 13ம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் 5ஆம் நாள் இரவு மிகவும் முக்கிய சேவையான கருட சேவை நடைபெறுவது வழக்கம். அன்று திருமலையில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிவர். அதனால் அன்று தேவஸ்தானம் அனைத்து விதமான முதன்மை தரிசனங்களுடன் ரூ.300 விரைவு தரிசனம், நேர ஒதுக்கீட்டு டோக்கன் வழங்குவது உள்ளிட்டவற்றை ரத்து செய்துள்ளது. அன்று தர்ம தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். எனினும், வரும் 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் 7 ஆயிரம் தர்ம தரிசன நேர ஒதுக்கீட்டு டோக்கன்கள் மற்றும் விரைவு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.