பிரம்மோற்சவத்தின் 3 -ஆம் நாளில் யோக நரசிம்மர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி

திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் காலையில் சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வந்தார்.
பிரம்மோற்சவத்தின் 3 -ஆம் நாளில் யோக நரசிம்மர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி

திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் காலையில் சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வந்தார்.
 திருமலையில் கடந்த 13ஆம் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. விழாவின் முதல் 2 நாள்கள் சேஷ மற்றும் அன்னப்பறவை வாகனத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி, 3ஆம் நாளான சனிக்கிழமை காலை சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்காக பக்தர்கள் பக்தியுடன் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர்.
 சிம்ம வாகனம்: காட்டிற்கு ராஜா சிங்கம் ஆகும். அது காட்டில் உள்ள அனைத்து விலங்குகளையும் அடக்கி ஆள்வது போல், மனிதர்களை அவர்களின் நிலைக்கேற்ப அடக்கி ஆள்பவர் பரமாத்மா. காட்டில் மற்ற விலங்குகளுக்கு இல்லாத மகத்துவம் சிங்கத்திற்கு உண்டு. அதனால் இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரத்தை மேற்கொண்டார். அதை நினைவுகூரும் வகையில் பிரம்மோற்சவத்தின் 3ஆம் நாள் காலையில் சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அவதாரத்தில் அவர் மாடவீதியில் வலம் வந்தார்.
 ஸ்நபன திருமஞ்சனம்: மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்த களைப்பைப் போக்க அவருக்கு மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், பழரசங்கள் உள்ளிட்டவற்றை திருமலை பெரிய ஜீயர் தன் கைகளால் எடுத்துத்தர அர்ச்சகர்கள் உற்சவவர்களுக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தினர். அப்போது ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பலவிதமான மலர்கள், உலர்பழங்களால் ஆன மாலை, கிரீடம், ஜடை உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 ஊஞ்சல் சேவை: ஸ்நபன திருமஞ்சனம் முடிந்த பின் உற்சவ மூர்த்திகளை பட்டு வஸ்திரம், வைர, தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரித்தனர். அதன்பின் அவர்களுக்கு மாலை நைவேத்தியம் அளித்து, அவர்களை சகஸ்ரதீபாலங்கார மண்டபத்திற்கு தங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்தனர். அதன் பின் மாலை 5 மணி முதல் 6 மணி வரை அவர்களுக்கு 1008 விளக்குகள் கொண்ட மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர வைத்தனர். அப்போது இசைக் கலைஞர்கள் பக்திப் பாடல்களையும், கீர்த்தனைகளையும் இசைத்தனர்.
 முத்துப்பந்தல் வாகனம்: திருமலையில் பிரம்மோற்சவத்தின் 3ஆம் நாள் இரவு 8 மணிக்கு முத்துப்பந்தல் வாகனச் சேவை நடைபெற்றது. அப்போது மலையப்ப சுவாமி தன் நாச்சியார்களான ஸ்ரீதேவி பூதேவியுடன் வாகனத்தில் எழுந்தருளி தம்பதி சமேதராக மாடவீதியில் வலம் வந்தார். பிரம்மோற்சவத்தின்போது நடத்தப்படும் வாகனச் சேவைக்கு என தனி விசேஷம் உண்டு.
 நவராத்திரியின்போது ஓரறிவு கொண்ட உயிரினம் முதல் ஆறறிவு கொண்ட உயிரினம் வரையிலான பொம்மைகளை படிகளில் வைத்து அலங்கரிப்பர். அதேபோல் வாகனச் சேவையிலும் கடைப்பிடிக்கப்படும். ஊர்வனவாக கருதப்படும் சேஷ வாகனம், பறப்பனவாகக் கருதப்படும் அன்னப்பறவை வாகனம், காட்டில் வாழும் சிங்கம் உள்ளிட்டவற்றில் எழுந்தருளிய பகவான், 3ஆம் நாள் இரவு கடலுக்கு அடியில் சிப்பிக்குள் சேரும் மழைநீரால் உருவாகும் முத்துக்களை சிறப்பிக்கும் வகையில் முத்துப்பந்தல் வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.
 முத்துக்களுக்கு உயர்ந்த தன்மை உள்ளது. அதேபோல் மனிதர்கள் தங்கள் மனதில் இறைநிலை என்ற மழைத்துளியை விதைத்தால் அவர்களுக்கு வீடுபேறு என்ற மகத்தான முத்து கிடைக்கும் என்பதே இதன் தத்துவமாகும்.
 வாகனச் சேவைகளில் அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். வாகனச் சேவையின் முன் திருமலை ஜீயர்கள் குழாம் வேதகானம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாராயணம் செய்தனர். வாகனச் சேவையின் பின்னால் நாடெங்கிலுமிருந்து வந்த கலைக்குழுக்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தின. இது மாடவீதியில் காத்திருந்த பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.
 மாடவீதியில் வாகனங்களில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு பக்தர்கள் பழங்களை நைவேத்தியமாக சமர்ப்பித்து, கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com