2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது? குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார்? என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் 04.10.2018 வியாழக்கிழமை, புரட்டாசி மாதம் 18-ம் நாள், தசமி திதியில், சனிபகவானின் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில் 10.07-க்கு அமிர்த-சித்த யோகத்தில் குருபகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு (விசாகம் 4-ம் பாதத்தில்) குருபகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 2018 அக்டோபர் மாதம் 11-ம் தேதி வியாழக்கிழமை 4:49-க்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். மேலும், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி 2:39 மணி வரை குருபகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார்.
குருபகவான் நம் சரீரத்தில் மூளை பகுதியில் அமர்ந்திருக்கிறார். எனவே, இவர் சிந்திக்கும் ஆற்றலை நமக்குத் தருபவர். பூர்வ ஜென்ம நியாபகங்களை அளிப்பவர், நல்ல நினைவாற்றலைத் தருபவரும் இவரே. ஆனால், குருபகவான் அஷ்டமத்தில் அமர்ந்து நீச்சமாகி பாபகிரகங்கள் பார்க்கும் போது தான் நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இது அபகீர்த்தி யோகம் என்று அழைக்கப்படுகிறது.
• விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.
• விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் அடுத்த விகாரி வருடம் அக்டோபர் மாதம் 29-ம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார்.
• விருச்சிக ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மீன ராசியையும் - ஏழாம் பார்வையால் ரிஷப ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் கடக ராசியையும் பார்க்கிறார்.
• குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் பலமே அதிகம். எனவே, குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.
2018-2019-ம் ஆண்டிற்கான குருப்பெயர்ச்சி பலன்களில், அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதைப் பற்றி அடுத்து விரிவாகப் பார்க்கலாம்.