திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் இறுதி நாளான இன்று சக்கரஸ்நான தீர்த்தவாரி இன்று காலை நடைபெற்றது.
திருவேங்கடமுடையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் (9-ம்) இறுதி நாளான இன்று தீர்த்தவாரி காலை நடைபெற்றது.
பிரம்மோற்சவத்தின் 7 நாள்களிலும் காலையும் இரவும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார் மலையப்ப சுவாமி. 8-ம் நாளான நேற்று காலை தன் நாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளிய காட்சியளித்தார். மாலையில் குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.
பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று காலை சக்கரஸ்நான தீர்த்தவாரி நடைபெற்றது. சக்கரத்தாழ்வாருக்கு வராகசாமி கோயில் முன்பாக வைத்து திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து மாடவீதிகள் வழியாகக் கொண்டு செல்லப்பட்ட சக்கரத்தாழ்வார் தெப்பக்குளத்தில் வேதவிற்பண்ணர்கள் வேத மந்திரங்கள் ஓத தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தெப்பக்குளத்தின் அருகில் காத்திருந்தனர்.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்தவுடன் அனைத்துப் பக்தர்களும் தெப்பக்குளத்தில் நீராடினர். சக்கர ஸ்நானத்தைத் தொடர்ந்து மாலை ஊஞ்சல் சேவை நடைபெறும். இதனைத் தொடர்ந்து இரவு பிரம்மோற்சவத்திற்கான கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இத்துடன் இந்த வருடத்திற்கான பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.