திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயிலில் ஆழித் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோயில், தேவாரப் பாடல் பெற்ற, காவிரி தென்கரைத் தலங்களில் 87-வது சிவதலமாகும். மேலும், சப்த விடங்க தலங்களில் தலைமையானதாகும். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் நடைபெறும் ஆழித் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஆசியாவிலேயே 2-வது பெரிய தேர் எனும் சிறப்புக்குரியது. இக்கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா, ஆழித்தேரோட்டமும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா இன்று காலை 7.15 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி, எஸ்.பி துரை ஆகியோர் வடம்பிடித்து ஆழித்தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆருரா..தியாகேசா.. என்ற கோஷங்கள்முழங்கத் தேரை வடம்பிடித்து இழுத்தனர். மக்கள் வெள்ளத்தில் தேர் அசைந்த அசைந்து வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆழித்தேருக்குப் பின் அம்பாள் சண்டிகேஸ்வரர் தேர்கள் இழுக்கப்பட்டன. தேரோட்டத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.